பார்த்த ஞாபகம் இல்லையோ!

Jun 17, 2026,11:37 AM IST

- வ.துர்காதேவி


அவசரமான

காலை பொழுது!


இறக்கை இல்லாமல்

பள்ளியை நோக்கிப்

பறந்து கொண்டிருந்த

என் வண்டி,

வேறு வழியில்லாமல்

சற்று வேகத்தைக்

குறைத்துக் கொண்டது

வேகத்தடையைப் பார்த்து!


அப்போதுதான்

எதிரில்

அவளைப் பார்த்தேன்.


பார்த்த கணம்

கண் விரிய,

முகமெல்லாம்

மலர்ந்து சிரித்தேன்!




ஆம்!

அவள் என்

பள்ளித் தோழி!


அவளோ என்னை

பார்க்காதது

போல் பறந்துவிட்டாள்!


பிறகென்ன…

தடை ஏதுமின்றி

மனதில்

ஓராயிரம் கேள்விகள்

முளைக்கத் தொடங்கின!


அவள் என்னை

பார்த்தாளா இல்லையா?

பார்த்திருந்தால்

ஏன் பார்த்தும் பார்க்காதது

போல் சென்றுவிட்டாள்?


கேள்விகளுடனேயே

வீடு வந்து சேர்ந்தேன்.


பிறகுதான்

ஆரம்பித்தது

தலைவலி!


25 ஆண்டுகள்

உருண்டோடிவிட்டன;

ஆனால்,

அன்று பார்த்தது போல்

இன்றும்!


சொல்லப்போனால்

இன்னும் பொலிவுடன்,

இன்னும் நிறம் கூடி,

நவநாகரிக ஆடை அணிந்து ....


எப்படி சாத்தியமானது?


ஜிம்மிற்குச் செல்கிறாளா?

பியூட்டி பார்லருக்கு

செல்கிறாளா?

பிரத்தியேக டயட்

ஏதேனும்

எடுத்துக்கொள்கிறாளா?

எனக் கேள்விகள்

துளைத்தெடுத்தன!


அந்த இடத்தை

கடக்கும் போதெல்லாம்

அவளை தேடத்

தொடங்கின கண்கள்!


பல மாதங்கள்

கழிந்தன,

பதில் தெரியா

கேள்விகளுடன்!


எதிர்பாரா

ஒரு நாளில்,

வேகத்தடை

ஏதுமற்ற தெருவில்

என் வண்டியைச்

சட்டென்று மறித்து

நின்றது

அவள் வண்டி!


பின் சீட்டில்

இருந்து

மெதுவாக இறங்கியவள்,

என் கையைச்

சிநேகமாய் பற்றிக்கொண்டு

மகிழ்ச்சி பொங்கப்

பேசத் தொடங்கினாள்.


என் கண்களோ

கொஞ்சம் தள்ளி,

தூரமாய்

நின்றிருந்த

அந்தப் பெண்ணின்

மேலேயே இருந்தது!


சில

வினாடிகள் ஆயின

உண்மை புரிய…


ம்….

அன்று

நான் பார்த்தது

என் தோழியை அல்ல!

அவளின் மகளை…!


(About the Author: Durgadevi V, Graduate Teacher, GHS Nesal, Tiruvannamalai District)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்