- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
அன்று வீடே ஒரே பரபரப்பாய் இருந்தது. நாளை வசந்திக்கு வளைகாப்பு. வசந்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஒருத்தி அவள் கைக்கு மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள். அத்தை மகள், வளைகாப்புக்கு வருகிறவர்களுக்காக தாம்பூலப் பை தயார் செய்து கொண்டிருந்தாள். வசந்தியின் கணவர், நாளை சமையலுக்கு வேண்டிய பொருட்கள் வாங்குவதில் மும்முரமாய் இருந்தார். மாமனார் எனக்கு பேரனோ, பேத்தியோ ...என்னோடு விளையாட விரைவில் வரப்போறாங்க ..என ஆனந்தமாய் யாருடனோ போன் பேசிக் கொண்டிருக்கிறார். அவள் மாமியாருக்கோ மனதிற்குள் அப்படி ஒரு சந்தோசம். மகிழ்ச்சி பொங்க வசந்தியை அடிக்கடி , அது சாப்பிடு ,இது சாப்பிடு , என கவனித்துக் கொண்டிருந்தாள்.
வசந்திக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. பலவித சிந்தனைகள் . நாளை நடக்கப் போகும் வளைகாப்பு நிகழ்வை, நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். கூடவே பழைய நினைவுகளும்.
இது எத்தனை வருட கனவு. திருமணமாகி இந்த பத்து வருடங்களில் நான் எவ்வளவு தவித்து இருப்பேன். ஒரு வருடமா? இரண்டு வருடமா ? பத்து வருடங்கள். ஒவ்வொரு மாதமும் கனவு காண்பேன். ஒரு சில நாட்கள் தள்ளிப் போனாலும் ,என் குழந்தை தான் வந்திருக்கிறாள் என சந்தோஷத்தில் புரித்துப் போவேன். வார இறுதியில் சோகம். அடிக்கடி வேண்டிக்கொள்வேன் .பராசக்தி நீயே வாடி என் வயிற்றுக்குள்ளே என.
உணவை சுமந்தது போதும் .உன்னை சுமக்க வேண்டும் .எங்கே இருக்கிறாய் நீ. வாடி என் செல்லமே... என வேண்டாத நாட்களே இல்லை.. பார்க்காத டாக்டர் இல்லை. சாப்பிடாத மருந்து இல்லை. 35 வயதை நெருங்கி விட்டேன். என் மனம், நாடி , நரம்பு எல்லாம் படபடக்கிறது. எப்போது என் மகள் எனக்கு கிடைப்பாள் என.
திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகு , நான் எந்த விழாவுக்கும் செல்வதை நிறுத்தி விட்டேன். விழாவில் எல்லோரும் கேட்கும் கேள்விகள் . ஏதேனும் விசேஷம் உண்டா..?? எப்போது நல்ல செய்தி கூறப் போகிறாய்..? வயிற்றில் புழு பூச்சி உண்டா..? இந்த விசாரிப்புகளை கேட்டு கேட்டு சலித்து விட்டது. வாழ்க்கையே வெறுமையாகி விட்டது. புழுவாய் துடிக்கும் என் மனசு. என்னை மலடி ஆக்கி விடாதே என இறைவனிடம் வேண்டாத நாள் இல்லை.
என் தாயின் மடியில் அழுது புரள்வேன். நான் என் தாய்க்கு இந்த சோகத்தை தரவில்லை. டாக்டரிடம் சென்றால்… இருவருக்கும் குறை ஒன்றும் இல்லை .நடக்கும். நம்பிக்கையோடு காத்திருங்கள்.. என்று கூறுவார்களே தவிர, தாமதத்திற்கு ஒரு காரணமும் அவர்களிடம் இருந்து கிடைக்காது. என் மனதிற்குள் மட்டும் ஏன் ஏன்..? என்ற கேள்வி துளைத்துக் கொண்டே இருக்கும். சிலர் எளிதாக எத்தனையோ குழந்தை பெற்றுக் கொள்கிறார்களே. நமக்கு மட்டும் ஏன் இப்படி..? என்ற கேள்விக்கு விடை காண முடியாது தவித்துக் கொண்டிருப்பேன்.
டெஸ்ட் டியூப் பேபி இருக்கிறது. இன்னும் ஏதேதோ முறைகள். பல லட்சங்கள் செலவாகும். மிகவும் மெனக்கிட வேண்டும் . உயிர் போகும் வலி, வேதனை வேறு... எங்களிடம் அத்தனை பணவசதி இல்லையே. பராசக்தியை வேண்டுவது மட்டுமே ஒரே வழி. நாங்கள் சொல்லவொண்ணா சோகத்தில் மூழ்கியிருந்தோம்.
எல்லா சோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டார் கடவுள். இதோ நாளை எனக்கு வளைகாப்பு. அடுத்த மாதம் என் கைகளில் என் குழந்தை. நினைவு அலைகளில் மூழ்கி ,அப்படியே தூங்கிப் போனாள் வசந்தி.
மறுநாள் வளைகாப்பு விழா . மகிழ்வாய், எளிமையாய் நடந்து முடிந்தது. அனைவரும் அக்கறையுடனும் அன்புடனும் விழாவின் ஒவ்வொரு வேலையையும் கவனித்துக் கொண்டார்கள். பார்க்க மகிழ்வாய் இருந்தது அவளுக்கு. மாத இறுதியில் அழகாய் பராசக்தியே அவள் குழந்தையாய் வந்திருந்தாள். குழந்தையை பார்க்கப் பார்க்க அவளுக்குள் சொல்ல முடியாத ஆனந்தம். இப்போதுதான் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாய் தோன்றியது வசந்திக்கு.
நாட்கள் வேகமாய் ஓடின. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குழந்தை வளர்ந்து ... நான்கு வயது பெண்ணானாள். நல்ல அறிவு .நல்ல அழகு . கண் பட்டுவிடும் அழகு . பூரித்துப் போனாள் வசந்தி. குழந்தையை பக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஆங்கில பள்ளியில் சேர்க்கலாம் என முடிவாகி சேர்த்தாகிவிட்டது. குழந்தையை பள்ளியில் சேர்த்த முதல் நாள் அனுபவம் ..அவள் கண் முன்னே.
என் மகளை முதல் நாள் ,அவள் பள்ளியில் விட்டு வரும்போது, அவளின் கயல் விழிகளில் இருந்து கண்ணீர் ததும்பியது. அம்மா அம்மா என அவள் தேம்பி அழுதது, என்னை என்னமோ செய்தது. வேறு வழியின்றி பள்ளிக்கு வெளியிலேயே நின்று , நானும் அழுது கொண்டிருக்கிறேன். அனைத்து பெற்றோர்களின் நிலையும் அப்படித்தான்.
பள்ளி அப்படி ஒன்றும் பெரிய பள்ளி அல்ல. இட நெருக்கடி மிகுந்த பள்ளி. வசதிகள் மிக மிக குறைவு தான்.. ஆனால் என் வீட்டிற்கு மிக மிக அருகில் இருந்தது . குழந்தையை அழைத்து வருவது எளிது. குழந்தைகளுக்கு நன்றாக சொல்லித் தருகிறார்கள் என்று பெயர் பெற்ற பள்ளி, என்பதால் அப் பள்ளியில் சேர்த்தோம்.. கட்டணமும் கொஞ்சம் குறைவு தான்.
அவரின் சம்பாத்தியத்தில் எதும் பெரிதாய் சேர்த்து வைக்கவில்லை சேமிப்பு பணம் முழுவதும், என் குழந்தையின் வருகைக்காகவே , 10 வருடமாக ...பல மருத்துவமனையில் செலவிடப்பட்டு விட்டது. அதனாலேயே இந்த முடிவு. பிறகு பார்த்துக் கொள்ளலாம் நல்ல பள்ளியாக என நினைத்து சேர்த்தோம். தினம் தினம் அவள் பள்ளி செல்லும் அழகை கண்டு ரசித்தேன். அகமகிழ்ந்து போனேன். ஆறு மாதங்கள் அவசரமாய் அழகாய் ஓடி விட்டன.
ஒரு நாள் அப்பள்ளியிலிருந்து ஒரே கூக்குரல். விகாரமான, சத்தங்கள். எட்டிப் பார்த்தால் ஒரே புகைமண்டலம். பதறிப்போனோம். அனைவரும் ஓடினோம். கண்டோம் அக் கோரக்காட்சியை. குலை நடுங்கும் கோர விபத்து. பள்ளி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. செய்வதரியாது திகைத்து நின்றோம். அழுது புலம்பினோம். ஆர்ப்பரித்தோம்.
ஒரு பயனும் இல்லை. தீயணைப்பு படை வந்தது. தீயை அணைக்க மிகவும் போராடினர் . பள்ளியினுள் நுழைய முடியவில்லை. ஒரே புகை மண்டலம். நெருப்பின் கோர தாண்டவம் உச்சத்தில் இருந்தது. அங்கே குழந்தைகள் அலறி துடிக்கும் சத்தம் கேட்கிறது..நான் உள்ளே ஓட முயன்றேன். தடுத்து பிடித்து இழுத்தனர். போனால் நானும் தான் கருகுவேன் என்பது தெரியும். ஆனால் அங்கே என் குழந்தை எப்படி இருக்கிறாளோ என்ற தாங்க முடியாத தவிப்பு என்னுள்.
நாங்களும் எத்தனையோ தடவை, அந்தப் பள்ளியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை வைத்தோம். எந்த பலனும் இல்லை. அரசாங்கத்திற்கு எழுதி இருக்கிறோம் என்பதே பதிலாக இருந்தது. மேலே கூரை வேய்ந்த கட்டிடம். வெயில் காலத்தில் நன்றாக இருந்தாலும் அது பாதுகாப்பு இல்லாததாகவே உணர்ந்தோம். கூரையை மாற்றுங்கள் என பலமுறை பெற்றோர்கள் மனு செய்வோம். அதை அரசாங்கம் செய்ய வேண்டுமா? அல்லது நிர்வாகம் செய்ய வேண்டுமா என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதும் நடக்கவில்லை.
இப்போது அங்கு இந்த குலை நடுங்கும் சோகம் நடந்து விட்டதே. நூறு இளம் தளிர்கள் அப்பள்ளியின் உள்ளே. தீயணைப்பு படையின் உதவியால் தீயின் ஆக்ரோஷம் சற்று குறைந்த பிறகு, அனைவரும் ஓடினோம் .படிக்கட்டு குறுகலான படிக்கட்டு. முண்டி அடித்துக் கொண்டு ஓடினோம்.
அங்கே சென்று நாங்கள் கண்ட கோரக்காட்சி.... அப்பப்பா சொல்லி மாளாது. ஒரு பக்கம் டிபன் பாக்ஸ் கருகிய நிலையில்... ஒரு பக்கம் யூனிபார்ம் பாதி எரிந்த நிலையில்.... கருகிய நிலையில் பாடப் புத்தகங்கள். ஒரு பக்கம் எழும்பாய் போன குழந்தைகள். பார்த்த அந்த நொடியில் நான் என் சுயநினைவை இழந்தேன். தாங்கி கொள்ள முடியாத சோகம். அனைத்து பெற்றோர்களும் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத அந்த கோரக்காட்சி , சொல்ல முடியாத நரக வேதனை.
காலையில் தலை பின்னி , பூச்சூடி, சீருடையுடன் , சாப்பாடு எடுத்துப் போன குழந்தைகள்... அழகு சிலைகள் ...இப்படி அலங்கோல எலும்பு துண்டுகளாய் கிடக்கிறார்களே. ஏன் நடந்தது ? எப்படி நடந்தது..? என பல கேள்விகள் பலரின் இதயத்திற்குள்.
இதற்கு யார் காரணம் ? ஆசிரியர்கள் என்ன செய்தார்கள்..? எங்கே போனார்கள்..?? யார் காரணமாய் இருந்தால் என்ன ? எங்கள் குழந்தைகள் போய் விட்டனவே !! யாரிடம் நியாயம் கேட்க..? யார் என் குழந்தையை திருப்பிக் கொடுப்பார்கள்? இறைவனே எங்களை தண்டித்து விட்டானே ..? யாரிடம் முறையிட.?
காலையில் புதிதாய் பூத்த மலர்களாய் பள்ளிக்கு சென்றவர்கள் ,சற்று நேரத்தில் சாம்பலாகிப் போனதை எப்படி ஜீரணிக்க முடியும்.. ? எப்படி நடந்தது ? தெரிந்து என்ன செய்ய ..? ஒரு பயனும் இல்லையே? என் குழந்தை திரும்பி வருவாளா.? நாங்கள் எங்கள் மனதை எப்படி தேற்றிக்கொள்ள போகிறோம் .தாங்க முடியவில்லையே . 100 பிஞ்சு குழந்தைகளை தீ காவு வாங்கி விட்டதே. சாம்பலாகி போய் விட்டார்களே .என்ன செய்ய முடியும்? யாரால் என்ன செய்ய முடியும் ? புலம்புவதை தவிர.
ஐயோ ...நான் என்ன செய்வேன் ..? அவள் என் வயிற்றில் இருக்கும் போது , பாவாடை நாடாவை கூட , அவளுக்கு வலிக்குமோ.. என தளர்வாய் கட்டி, வழுக்கிவிடாதபடி அவ்வப்பொழுது பிடித்துக் கொள்வேனே. இந்த வலியையும் வேதனையும் அவள் எப்படி தாங்கி இருப்பாள்.? .எப்படி துடிதுடித்துப் போயிருப்பாள்..? ஐயோ.... அந்த பிஞ்சு கைகள் ..பிஞ்சு கால்கள்.. இருந்த இடமே தெரியாமல் போய்விட்டனவே. தேம்பித் தேம்பி கதறிக் கொண்டிருந்தாள் வசந்தி.
இந்த விபத்து உலக செய்தியாகிவிட்டது. முதலமைச்சர் முதல் அனைத்து அரசியல் தலைவர்கள் வரை ஒரு வாரமாய் வருவதும் ,போவதும், ஆறுதல் சொல்வதுமாய். யார் வந்து என்ன பயன்..? எத்தனையோ தடவை அந்தப் பள்ளியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யக் கோரிக்கை வைத்தோமே. அரசிற்கு கூட எத்தனையோ விண்ணப்பங்கள் அனுப்ப பட்டன. ஏதும் நடக்கவில்லையே. இத்துனை இளம் தளிர்களின் உயிர் போன நிலையில் , இத்தனை பேர் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்களே.!!. யார் என் குழந்தையை திருப்பித் தருவார்கள். யாரால் முடியும்.. ?
போதுமான இடவசதி இல்லாத நிலையில், எப்படி அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. குழந்தைகளின் வகுப்புக்கு பக்கத்தில் சமையல் அறையில் பற்றிய தீ.. குழந்தைகளை பதம் பார்த்து விட்டதே. ஆசிரியர்கள் எங்கு போனார்கள்.? தெரியவில்லையே..ஆசிரியர்கள் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு எங்கே சென்றார்கள்..? பிரதம மந்திரி கூட வந்து பார்த்து சென்றாரே.. யார் வந்து பார்த்து … என்ன பயன்.. ? ஒரு பயனும் இல்லையே. எங்கள் மனசு தீயால் வெந்து கொண்டிருக்கிறது.
பத்து வருடம் தவமிருந்து பெற்ற என் செல்ல மகள், என் வீட்டு மகாலெட்சுமி போய்விட்டாளே.. ஐயோ யாரிடம் சொல்லி அழுவேன். காட்டன் புடவைகளை தவிர வேறு எதையும் கட்டுவதில்லை தெரியுமா..?? வெப்பத்தில் அவள் கலைந்து விடுவாளோ
என பயந்து...!! இப்போ இந்த வெப்பத்தை எப்படி தாங்கினாய் மகளே..?
வசந்திக்கு பைத்தியம் பிடிக்காத குறை. அழுது புலம்பினாள். சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. குழந்தை எப்படி துடிதுடித்து போயிருப்பாள் என்ற நினைவே அவளுள் எப்போதும். ஐயோ என் குழந்தை மட்டுமா... நூறு குழந்தைகளும் அல்லவா துடிதுடித்துப் போய்விட்டார்கள் . அந்தக் கோர நிகழ்வை நினைக்கும் போதே உடல் பற்றி எரிகிறது. மனசு தகதகவென தவிக்கிறது. எப்படியும் அவள் மனதினை சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. பராசக்தி.. மேலே கோபம் வந்தது. நீயே வந்தாயே .ஏன் என்னை இப்படி தவிக்க விட்டு விட்டு, போய்விட்டாய்..? என அழுது புலம்பினாள். உயிருள்ள பிணமானாள். அவள் கணவரும் எவ்வளவோ தேற்றிப் பார்த்தார். முடியவில்லை.
நான் இனி என்ன செய்வேன்..?. மீண்டும் வந்து விடு மகளே. .நீயே என் வயிற்றுக்குள்ளே. மறுபடியும் வந்துவிடு.... வாடி என் கண்மணியே...என் வயிற்றுக்குள்ளே..,!! உன் உடல் கருகி இருக்கலாம் .உன் உயிர்...? நான் உன்னை மீண்டும் சுமக்கிறேன்...வாடி என் செல்லமே. விரைவில் வந்து விடு தாயே. என் பிள்ளை தானே நீ . நீ இல்லாத வலியை உன் தாய்க்கு தந்து விடாதே. மீண்டும் வந்து விடுடி. புழம்பிக் கொண்டே இருந்தாள் வசந்தி.
சில மாதங்களில்… ஒரு மாதம் அவளுக்கு தள்ளிப்போனது. இனம் புரியாத ஒரு ஆனந்தம் மனதிற்குள். என் மகள் வந்து விட்டாள். என் மகள் வந்தே விட்டாள் என மனதிற்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாள் வசந்தி. பத்து நாட்கள் ஆனதும் சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டாள். நல்ல செய்தி. முடிவு அறிந்து வசந்தியின் முகத்தில் மகிழ்ச்சி பிரவாகம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
Vijay Rupani: விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!
{{comments.comment}}