சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சட்டமன்ற மாண்பும், எதிர்க்கட்சிகள் மீதான பார்வையும்:
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் சட்டமன்றத்தின் மாண்பைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே மிகச் சரியாகக் கடைப்பிடித்து வருகிறோம். நாங்கள் மக்கள் நலனுக்கான திட்டங்களையும், முக்கியமான கருத்துகளையும், கொள்கைகளையும் மட்டுமே அவையில் பேசி வருகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே எந்தவொரு முதலமைச்சரும் செய்யாத வகையில் எங்களது முதலமைச்சர் (விஜய்) செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு எதிர்க்கட்சிகள் பேசியதை இதுவரை நேரலையில் காட்டியதே இல்லை; ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியை ஒருபோதும் எங்களுக்கு எதிரியாகப் பார்க்கவில்லை" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
திமுகவினரின் 'Sofa Model' விமர்சனம்:

தொடர்ந்து பேசிய அவர், தவெக முதலமைச்சருக்கு எதிராக திமுகவினர் திட்டமிட்டு போலி நெரேட்டிவ்களை (பரப்புரைகளை) உருவாக்கி வருவதாகக் சாடினார். "விஜய் பேசமாட்டார், மாறாக ராஜ்மோகன், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்றோர்தான் பேசுவார்கள் என திமுகவினர் அவதூறு பரப்புகிறார்கள். சட்டமன்றத்தில் அவர்கள் இத்தகைய போலி பரப்புரைகளை மேற்கொள்ளும்போது, அதற்கு உரிய மறுப்பு தெரிவிப்பது எங்களது கடமையாகும். எங்களை 'SOFA MODEL' என்று விமர்சித்ததற்கு நாங்கள் ரியாக்ட் செய்யவில்லை; ஏனென்றால் அது முற்றிலும் பொய்யான ஒன்று. கொளத்தூர் என்பது பயன்படுத்தக் கூடாத வார்த்தையா?" என்றார்.
மேலும், "கடந்த மூன்று நாட்களாக முதலமைச்சரை எள்ளி நகையாடி வரும் திமுகவினரைப் பார்த்து, அவர்களது கூட்டணிக் கட்சியினர் ஏன் இதுவரை கேள்வி எழுப்பவில்லை? நான்கு நாட்களாக சட்டமன்றத்தில் நடந்த காட்சிகளை திருமாவளவன் போன்ற தலைவர்கள் கேட்க வேண்டும். எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, அரசியல் ரீதியாகப் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்பில் மகேஷ் மீது ஊழல் குற்றச்சாட்டு:
கல்வித்துறை ஊழல் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, "ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் புதுப்பிப்புக் கட்டணம் (Renewal fee) எவ்வளவு வாங்கினார்கள்? முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் நிமிர்ந்து நின்று 'நான் பணம் வாங்கவில்லை' என்று கூற முடியுமா? தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1000 தனியார் பள்ளிகளிடமும் தலா 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார்கள். இதைச் சட்டரீதியாக நிரூபிக்க முடியுமா என்று கேட்டால், அதற்கான உரிய காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகள் இதனை நிச்சயமாக நிரூபிக்கும். ஆனால், உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று அனல் பறக்கக் கூறினார்.
சபரீசன், உதயநிதி மீது புகார்:
திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மற்றொரு பெரும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த அவர், "திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசின் 32 துறைகள் தலா 16 ஆகப் பிரிக்கப்பட்டு வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு 16 துறைகளும், சபரீசனுக்கு 16 துறைகளும் ஒதுக்கப்பட்டு இந்தத் துறைகளில் பெரும் கொள்ளை நடைபெற்றுள்ளது" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடிப் பேட்டி, திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
மச்சான் ஓ நெனப்புலதான்.. மனசும் கெறங்குதே!
தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி
"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
ஜூன் மாதம் 27.. சகல நன்மை தரும் சிவபெருமானக்குரிய சனிப்பிரதோஷம்
இதுவும் சரிதானே!
மின்வாரிய நிதிநிலை...வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்
உடைமை தன்மை பற்றி (All about Possessiveness) அலசிப் பிழிவோமா?
{{comments.comment}}