சென்னை: நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா அரசியலில் களமிறங்கப் போகிறார் என்ற பல்வேறு செய்திகளும், விவாதங்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கம் சார்பில் இன்று (29.06.2026) ஒரு முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ஹரிராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
"28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட திரு. இரா. வீரமணி அவர்கள், ‘இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். ஆனால், அவரது உரையைத் தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது நற்பணி மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திரு. இரா. வீரமணி அவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

அதேபோல், திரு. சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அவரும் அரசு சாரா அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளைத் தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் திரு. R.A. ராஜ் மற்றும் அமைப்பாளர் திரு. G. ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல், மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அந்த அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்கு நற்பணி இயக்கத்தின் இந்த அதிரடி மற்றும் தெளிவான விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் திரை உலக வட்டாரங்களும், அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர். மக்களுக்கான நற்பணிகளிலும், சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் மட்டுமே நடிகர் சூர்யா தற்பொழுது முழு கவனம் செலுத்தி வருகிறார் என்பது இதன் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}