18 வருடம் வாழ்ந்த மனைவியை பிரிந்தார் கனடா பிரதமர்..!

Aug 03, 2023,09:11 AM IST
டோரன்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடியோ  தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். இந்தத் தம்பதியின் 18 வருட கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவது ஜஸ்டினின் ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடினமான, அர்த்தப்பூர்வமான உரையாடலுக்குப் பிறகு இந்த கஷ்டமான முடிவை எடுத்தோம் என்று ஜஸ்டின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் மனைவி சோபி கிரகெரி டிரூடியோவும் இதேபோன்றதொரு செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். இந்தத் தம்பதிக்கு சேவியர் (15),  எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.  மனைவியை சட்டப்பூர்வமாக பிரியும் ஆவணத்தில் பிரதமர் ஜஸ்டின் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் சட்டப்பூர்வமாகவே தனது மனைவியை ஜஸ்டின் விவாகரத்து செய்துள்ளது தெளிவாகியுள்ளது.



இருவரும் பிரிந்தாலும் குழந்தைகள் நலனுக்காக எப்போதும் குடும்ப உறவைப் பேணிக் காப்பார்கள். அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். கனடா மக்களுக்காக தொடர்ந்து உழைப்பார்கள். அடுத்த வாரம் குடும்பமாக சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு ஜஸ்டின் - சோபி தம்பதிக்குத் திருமணம் நடந்தது. இருவருமே பொது வெளியில் சேர்ந்தே உயர்ந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வந்தனர். இருவருமே குழந்தைப் பருவத்திலிருந்தே நண்பர்கள் என்பதுதான் முக்கியமானது. ஜஸ்டின் தம்பி படித்த அதே வகுப்பில்தான் சோபியும் படித்து வந்தார். பிறகு 2003ம் ஆண்டு ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் சந்தித்தபோதுதான் இருவரும் காதலைப் பரிமாறிக் கொண்டனராம். ஜஸ்டின்தான் முதலில் காதலைச் சொன்னாராம். "எனக்கு 31 வயதாகிறது.. கடந்த 31 வருடமாக உனக்காக காத்திருக்கிறேன்.. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று கேட்டாராம் ஜஸ்டின்.

அப்பா பியரி வழியில் மகன் ஜஸ்டின்



இப்போது இந்த ஆதர்ச தம்பதி பிரிவது கனடா மக்களுக்கே கூட அதிர்ச்சியானதுதான். ஜஸ்டின் தந்தை பியரியும் கனடா பிரதமராக இருந்தவர்தான். பியரியும் கூட பதவியில் இருக்கும்போதுதான் தனது மனைவியை விட்டுப் பிரிந்தார். அது 1977ல் நடந்தது. ஜஸ்டினின் தாயார், அவரது கணவரை விட 29 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பியரியின் மனைவி மார்கரெட் முதலில் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ ஆரம்பித்தார். அதன் பின்னர் ஆறு மாதம் கழித்து விவாகரத்து செய்தார். கணவரைப் பிரிந்த பின்னர் அவர் நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார். பியரி - மார்கரெட் தம்பதிக்கும் 3 குழந்தைகள்தான்.

பியரிக்குப் பிறகு பதவியில் இருக்கும்போது விவாகரத்து செய்த முதல் பிரதமராக அவரது மகன் ஜஸ்டின் உருவெடுத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்