அமரன் திரைப்படத்தில் இடம் பெற்ற.. பொறியியல் கல்லூரி மாணவரின் செல்போன் எண் காட்சி நீக்கம்!

Dec 06, 2024,05:09 PM IST

சென்னை: அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த கதையாகும்.இதுவரை இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.


இந்நிலையில், அமரன் திரைப்படத்தில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஒரு துண்டு சீட்டில் செல்போன் நம்பரை எழுதி தூக்கி வீசுவது போன்ற காட்சி ஒன்று படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியில் செல்போன் எண்ணும் காட்டப்பட்டிருக்கும். நிஜத்தில் அந்த எண் வைத்திருப்பவர் பொறியியல் மாணவர் வாகீசன் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ளார். அந்த செல்போன் நம்பருக்கு அடிக்கடி போன் கால் வருவதாகவும்,ரசிகர்கள் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.




தொடர்ந்து போன் வருவதால், தன்னால் அன்றாட வாழ்க்கையை கூட நிம்மதியாக கடக்க முடியவில்லை என்றும் வாகீசன் தெரிவித்துள்ளார். வெளியில் செல்வதற்கு காரை முன்பதிவு செய்யக்கூட இயலாதவாறு தொடர்ந்து போன் வருவதாகவும், சரியாக படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரசிகர்களின் தொந்தரவினால் எனது செல்போன் எண்ணை மாற்ற முடியாது. ஆதார், வங்கி உள்ளிட்ட சில முக்கியமானவற்றிற்கு இந்த எண் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்  படத்தில் தெரியும் எண்ணை மறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 


இதுதவிர அமரன் படக்குழுவிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வாகீசன் தனது வழக்கறிஞர் மூலமாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சியில் எண் மறைக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கள் அளித்தார். ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி இன்னும் தொடர்ந்து அழைப்புகள் வருவதாக தெரிவித்தார். 


இதையடுத்து இது குறித்து பதிலளிக்கும்படி தணிக்கை குழு, ராஜ்கமல் பிலிம்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்