எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது : மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

Jul 03, 2026,01:34 PM IST

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை தவெக அரசின் பழிவாங்கும் அரசியல் என்றும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


ஆணவம் அழிவுக்கான வழி :


முதல்வர் விஜய்க்கு எதிராக ஒருமையில் பேசியது, அவதூறு கருத்துக்களை தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், தனது கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆத்தூரில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை சேலம் ஆத்தூர் போலீசார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?




சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?


தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


"சர்வாதிகாரத்தின் உச்சம்" – திமுக விளாசல்


அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போதைய அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். தவெக அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், "இந்த கைது நடவடிக்கை என்பது சர்வாதிகாரத்தின் உச்சம்" என்று சாடினார். மேலும், "கடந்த கால திமுக ஆட்சியில், வெறும் அவதூறு வழக்குகளுக்காக யாரையும் இப்படி நள்ளிரவிலோ அல்லது அவசர அவசரமாகவோ கைது செய்த வரலாறு கிடையாது. கருத்து சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் மதிப்பளித்தே வந்துள்ளது. ஆனால், தற்போதைய தவெக அரசு, திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது."என்று அவர் குற்றம் சாட்டினார்.


சட்டரீதியாகச் சந்திப்போம்

அரசின் இத்தகைய அராஜகப் போக்கைக் கண்டு திமுக என்றும் அஞ்சாது என்று தெரிவித்த பாரதி, இத்தகைய அராஜகங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். மேலும், இந்த அநீதியான கைது நடவடிக்கையை திமுக சட்ட வல்லுநர்கள் மூலம் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, அனிதா ராதாகிருஷ்ணனை மீட்டெடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார். தவெக அரசு பொறுப்பேற்ற சில காலங்களிலேயே எதிர்க்கட்சியினரை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக திமுக தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த கைது நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்

news

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது : மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

news

சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

news

பெருமாளே போரொளியாக இணைத்துக் கொண்ட.. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)

news

ஜூலை மாதத்தில் என்னெல்லாம் வருது தெரியுமா.. மறக்க முடியாத ஆடி ஆன் தி வே!

news

"கோயில்களில் முறைகேடா? இனி நேரடியாக புகார் அளிக்கலாம்" – அமைச்சர் அறிவிப்பு!

news

முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது

news

உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிரடி முடிவு

news

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு புதிய செயலி: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்