Monday Motivation: உரைகாரன்.. மெளனம்.. நம்பிக்கை.. முனைவர் தங்கலட்சுமியின் 3 முத்துக் கவிதைகள்!

May 25, 2026,05:01 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


உரைகாரன்


பொருள் பொதிந்த இவ்வாழ்வைக்

கொண்டு கூட்டிப் பொருள் கொண்டு,

கொண்டு செலுத்திடும் இறைவா!

நீயோர் இலக்கண உரைகாரனோ?!


--


மௌனம்


உலகின் ஆகச் சிறந்த

உன்னத மொழி!

அகமெல்லாம் ஆனந்தம்   

புறமெல்லாம் புன்னகை! 


--


நம்பிக்கை




மனித வாழ்வில் உயிராய் 

ஓர் இலட்சியம் வேண்டும்!


எண்ணிய இலட்சியம் நிறைவேற 

மனதில் உறுதி வேண்டும்!


எளிதாய்க் கிட்டும் 

வெற்றியின் மாண்பைவிட

கடுவ(லி)ழி கடந்த இலக்கை 

அடையும் மதிப்பே உயர்வு! 


இலக்கை நிர்ணயி!

நிச்சயித்த இலக்கை அடைய 

நேரிய வழி வகுத்திடு!


வகுத்திட்ட வழிதனில் 

வலிவுடன் நடைபோடு!


மெய் வருத்த முயற்சி செய்; 

முயற்சி தோற்றிடின் 

மெய்யை வருத்தி மாய்க்காதே!


இலக்கை எட்டிட 

நம்பிக்கை எனும் 

நண்பனைக் கைக்கொள்!


நம்பிக்கை எனும் நண்பன் 

உன்னில் வேறல்ல; 

உன்னுள் ஆழோடிய 

வேரெனப் பதியனிடு!


நம்பிக்கை வேர் இறுக இறுக 

இலட்சியக் கனி உறுதி! உறுதி!!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்