ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே சுட்டுக் கொலை.. ஈரானில் அரங்கேறிய பயங்கரம்!

Jul 31, 2024,07:55 PM IST

டெஹ்ரான்: ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே  ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை ஈரான் அரசும், இஸ்ரேல் அரசும் உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல்தான் இந்த படுகொலையின் பின்னணியில் இருப்பதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.


ஈரான் புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கத்தார் நாட்டிலிருந்து டெஹ்ரான் வந்திருந்தார் இஸ்மாயில் ஹனியே. இந்த சம்பவத்தில் ஹனியேவின் பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.




இதுகுறித்து ஹமாஸ் இயக்கம் கூறுகையில், நமது சகோதரர், வீரர், தலைவர், தியாகி, பாலஸ்தீனத்தின், அரபு நாடுகளின், இஸ்லாமிய நாடுகளின் அன்பைப் பெற்ற முஜாஹித் இஸ்மாயில் ஹனியே சில துரோகிகளால் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மறைவுக்கு இஸ்லாமிய புரட்சி இயக்கம் ஹமாஸ் இரங்கல் தெரிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


ஹனியேவைக் கொன்றது யார், எப்படிக் கொல்லப்பட்டார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரை இஸ்ரேல் கருத்து தெரிவிக்கவில்லை. அமைச்சர்கள் யாரும் இதுகுறித்து பேசக் கூடாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு கடும் தாக்குதலைத் தொடுத்தது. 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஆவேசமான இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் புகுந்து அதை நிர்மூலமாக்கி விட்டது. மனிதர்களால் வசிக்கவே முடியாத அளவுக்கு காஸாவை சின்னாபின்னமாக்கி விட்டது இஸ்ரேல்.  இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்படியும் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.


ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து வந்த இஸ்மாயில் ஹனியே 2019ம் ஆண்டு காஸா முனையை விட்டு வெளியேறினார். ஹமாஸ் நிர்வாகத்தின் கீழ் காஸா இருந்தபோது அதன் பிரதமராக இருந்தவர் ஹனியே. பின்னர் கத்தாரில் போய்  

செட்டிலானார். இவரைத்தான் காஸா மக்கள் வெகுவாக நம்பியிருந்தனர். சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் இஸ்மாயில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவார், காஸாவை கட்டியமைப்பார் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். தற்போது அது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.


குடும்பத்தில் பலரும் படுகொலை 


இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தில் பலரும் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் 14 பேர் இஸ்ரேலிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். காஸா நகரில் உள்ள இவர்களது வீட்டில் வைத்து அனைவரும் கொல்லப்பட்டனர்.


அதே ஆண்டு நவம்பர் மாதம் ஹனியேவின் பேத்தி காஸாவில் நடந்த இஸ்ரேல் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.  அதே மாதத்தில் இன்னொரு பேரனும் கொல்லப்பட்டார். 2024 ஏப்ரல் மாதம் 10ம் தேதி இவரது  3 மகன்களும்,  3 பேரக் குழந்தைகளும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 2024, ஜூன் 25ம் தேதி நடந்த இஸ்ரேல் தாக்குதலில்  இவரது குடும்பத்தைச் சேர்ந்த 81 வயது சகோதரி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். ஹனியேவுக்கு மொத்தம் 13 பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

அதிகம் பார்க்கும் செய்திகள்