டெல்லி: மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூட முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் திட்டமிடப்பட்டு தற்போது 6 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. கடைசிக் கட்டமாக ஜூன் 1ம் தேதி இறுதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அன்று இரவுக்குள் ஓரளவுக்கு முடிவுகள் தெளிவாகி விடும் என்பதால், ஜூன் 4ம் தேதியே அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதும் தெளிவாகி விடும்.

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக பலமாக நம்பப்படுகிறது, பேசப்படுகிறது. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியும், நாங்களே மீண்டும் ஆட்சியமைப்போம் என்று வலுவாக கூறி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் கடைசிக் கட்டத் தேர்தல் வந்து விட்டதால் கட்சிகள் அடுத்தடுத்த வேலைகளுக்கு ஆயத்தமாக ஆரம்பிக்கின்றன.
குறிப்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஜூன் 1ம் தேதி டெல்லியில் கூடி ஆலோசிக்கவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று திரினமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு அன்றைய தினம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரினமூல் காங்கிரஸ் தவிர்த்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், தேர்தல் சமயத்தில் நாங்கள் யாரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. போன் மூலமாகவே பேசிக் கொண்டிருந்தோம். இந்தியா கூட்டணி இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நாடு முழுவதும் நல்ல ஆதரவு காணப்படுகிறது. தேர்தலில் எப்படி செயல்பட்டோம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம் என்றார்.
இந்தியா கூட்டணி இதுவரை பல முக்கிய விஷயங்களில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. அதாவது குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை. ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் இது அவசியம் தேவைப்படும். அதுகுறித்து டெல்லி கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. அந்தக் கூட்டணியை உருவாக்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான நிதீஷ் குமார் யாதவ் அதன் பின்னர் கூட்டணியை விட்டு விலகிச் சென்று விட்டார். இருப்பினும் தொடர்ந்து பலமாகவே செயல்பட்டு வருகிறது இந்தியா கூட்டணி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடும் நெருக்கடியையும் இந்தியா கூட்டணி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சில மாநிலங்களில் எதிரும் புதிருமாகவும் மோதியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் திரினமூல் காங்கிரஸும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதேசமயம், பாஜகவுக்கு எதிரான தங்களது நோக்கத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தில் நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}