டெல்லி: இந்தியாவின் 15 நகரங்களைக் குறி வைத்து நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்தியப் படையினர் அதைத் தாக்கி தகர்த்து முறியடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் உட்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளது பாகிஸ்தான். ஆனால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
ஸ்ரீநகர், பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா, ஆதம்பூர், பாரமுல்லா, ரஜோரி, ஜலந்தர், அவந்திப்பூரா, சண்டிகர், ஜம்மு, பதிண்டா, நால், பலோடி, உத்தர்லாய், பூஜ் நகரங்களை பாகிஸ்தான் குறி வைத்ததாக ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் 16 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார்.
இந்திய ராணுவ நிலைகளைத் தாக்க பாகிஸ்தான் முயன்றதற்கு பதிலடியாக, லாகூர் உட்பட பல இடங்களில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து அழித்து இந்தியப் படைகள் பதிலடி கொடுத்தன என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவுித்தனர். பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களின் அதே தீவிரத்துடன் இந்தியப் படைகளின் பதில் நடவடிக்கை இருந்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் படைகள் பயன்படுத்திய ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழக்கச் செய்தன. நமது நகரங்களை குறிவைத்து வந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த ரஷ்ய தயாரிப்பான எஸ்-400 பாதுகாப்பு அமைப்பை இந்தியா பயன்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்திய முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாத முகாம்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஐந்து முகாம்களிலும் துல்லியமான தாக்குதல்களை நடத்திய நிலையில் தற்போது பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை இந்தியப் படைகள் தகர்த்து முறியடித்துள்ள செய்தி வந்துள்ளது.
{{comments.comment}}