மகளிர் தினம்.. "குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை".. பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா பெண்கள்?

Mar 07, 2024,10:23 PM IST

சென்னை : உலகமே பெண்மையை போற்றும் மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த சமயத்தில் சமூகத்தில் இது வரை சாதனை படைத்த, பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த பெண்களை தான் ஒவ்வொருவரும் உதாரணம் காட்டி, மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படி சாதனை படைத்த பெண்கள் லட்சத்தில் ஒருவராக, கோடியில் ஒருவராக மட்டும் தான் இருக்கிறார்கள். ஆனால் மற்ற பெண்களின் நிலை....??? இதை பற்றி யார் பேசுவது ?


பெண்கள் முன்னேறி இருக்கிறார்களா, இல்லையா? என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்தியாவில் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என யாராவது ஒருவரால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியுமா? 


இந்தியாவில் குழந்தைகள் முதல் வயதான பாட்டி வரை பாதுகாப்பாக இல்லை. அதிலும் அவர்களின் கற்பிற்கு இந்த மண்ணில் பாதுகாப்பு என்பது இந்த நவீன காலத்திலும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது என்பதற்கு டில்லி நிர்பயா பாலியல் சம்பவம் துவங்கி, தற்போது புதுச்சேரியில் 9 வயது சிறுமி, கஞ்சா கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குப்பையை வீசி எறிவது போல் அவரது உடல் சாக்கடையில் மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் வரை காட்டுகிறது. 


தொடரும் நிர்பயா அவலங்கள்




டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் இரக்கமற்ற வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நினைக்கும் போதே நெஞ்சை பதற வைக்கும் விதத்தில் அவரது பிறப்புறுப்பில் துருப்பிடித்த கம்பியால் சிதைத்து, கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்தனர். அதை விட கொடூரமாக வெறும் 9 வயது மட்டுமே ஆன சிறுமியை நான்கு பேர் கொண்ட கஞ்சா போதைக்கு அடிமையான கும்பல், உடலை பிளேடினால் கிழித்து, பாலியல் பலாத்காரம் செய்து, சித்தரவதை செய்து, கொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. 


நிர்பயா வழக்கிலும் சரி, புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்திலும் சரி குற்றவாளிகளில் சிறுவர்களும் அடக்கம். அந்த அளவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது போதை, கஞ்சா சீரழித்துள்ளது. மதுவிற்கு எதிரான போராட்டம் என்பது இன்று, நேற்றல்ல மகாத்மா காந்தி சுதந்திரத்திற்காக போராடிய காலம் முதல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்டாலும் இந்த மது விவகாரத்திற்கு இதுவரை முடிவு வரவில்லை. 


தலைவிரித்தாடும் கஞ்சா போதை கலாச்சாரம்


இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும் சரி, ஆளும் கட்சிகளும் சரி மது ஒழிப்பு போராட்டம் என்பதை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். தீபாவளிக்கும், பொங்கலுக்கும், புத்தாண்டிற்கும், "டார்கெட்" வைத்து டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து அரசுக்கு கோடி கோடியாக வருமானம் ஒரு புறம் வருவது இருக்கட்டும். இன்னொரு புறம் அந்த மது போதையால் பறி போகும் உயிர்கள், பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கை பற்றி யாரும் கவலைப்படுவதாக கூட தெரியவில்லை. 


புதுச்சேரி சிறுமி படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகள் வெளியில் வராதபடி வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கும் படி கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என பலருக்கும் தெரிந்த நிலையில் அரசே இது போல் சொல்வது வேடிக்கையாக உள்ளது. அந்த குழந்தை நான்கு நாட்களாக உடலாலும், மனதாலும் அனுபவித்த சித்தரவதை, அவர்களின் குடும்பம் அனுபவிக்கும் மனவேதனை ஆகியவை, குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் சொகுசாக இருக்கும் வாழ்க்கையால் ஈடு செய்ய முடியுமா?


தண்டனை கடுமையாக வேண்டும்




ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அதற்கு அதிகபட்ச விசாரணை காலம் ஒரு வாரம், தண்டனை என்பதை அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அப்படி ஒரு செயலை செய்ய நினைக்க வேண்டும் என்றால் கூட அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். சாமானிய மக்களின் கோரிக்கையும் இது தான். நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கிலேயே குற்றவாளிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்தி மிக கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அதற்கு பிறகு பாலியல் பலாத்காரம் என்ற ஒரு சம்பவம் நாட்டின் எந்த மூலையிலாவது நடந்திருக்குமா?


விசாரணைக்கு பல ஆண்டுகள்,  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, முக்கிய குற்றவாளி சிறார் என்பதால் அவனுக்கு விடுதலை. இது குற்றம் செய்யும் மற்றவர்களுக்கு இன்னும் தைரியத்தை மட்டுமே கொடுக்கும்.  தண்டனைகள் கடுமையாகும் வரை இது போன்ற குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து கொண்ட தான் இருக்கும். மது, கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கு அரசியல்வாதிகள் ஆதரவாக இருப்பதை உடனடியாக நிறுத்தா விட்டால் நாட்டில் எந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியில் வரும் பயப்படும் நிலை தான் ஏற்படும்.


விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் எவ்வளவு வளர்ந்தும் என்ன பயன்? இது போன்ற கொடூரங்கள் சமூகத்தில் ஒழிக்கப்படும் வரை மகளிர் தினம் கொண்டாடி, பெண்களுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன பயன் ஏற்பட போகிறது?

சமீபத்திய செய்திகள்

news

போராட்ட வாழ்க்கையை வெல்ல.. இறைவன் துணை நிற்பான்.. Pray Almighty God

news

குட்டி பயணம் தாங்க வாழ்க்கை.. மறக்காமல் அனுபவிங்க.. It is a short trip, enjoy it.!

news

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு.. From Tamil Nadu to Malaysian Skies

news

தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

news

இவள் ஒரு தேவதை.. மறையாத மாமகள்.. A Little Angel "A Lifelong Legacy"

news

மதுரை சித்திரை திருவிழா 2026 எப்போது ? தேதி முழு விபரங்கள் இதோ

news

அகத்தி வேகாமல் கெட்டது முருங்கை வெந்து கெட்டது... உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

news

எது வேண்டும்.. யார் வேண்டும்.. சாய்ஸ் உங்கள் கையில்.. Choose Your Table

அதிகம் பார்க்கும் செய்திகள்