Kalaiyarasi Muthuvel Poems: பார்வை.. யாருக்குள் யார்.. சாபம்..!

May 22, 2026,03:21 PM IST

- கவி.கலை 


கவிஞர் சொ. கலையரசி முத்துவேல் எழுதியுள்ள அழகான மூன்று முத்துக் கவிதைகள்...


பார்வை


விழி விழித்திருப்பதல்ல பார்வை  

விழியினால் பிறர் வலி  

உணர்வது பார்வை! 

 

மதியினைக் கண்டு 

மனம் மகிழ்வதல்ல பார்வை,  

மதியால் நம்விதி வெல்வது பார்வை,  

 

கொடுமை கண்டு 

கோபம் கொள்வதல்ல பார்வை,  

கோர்க்கும் கரங்கள் பலவற்றால்  

கோபுரம் எழுப்புவது பார்வை.


--


யாருக்குள் யார் ? 




கல்லினுள்  சிலையும்  

காணும் சிலையில் கல்லும்  

காண்பவர் கண்களில்  

தெரிவதுண்டு . 

 

குழலினுள் இசையும்  

இசையினை மறந்து குழலும்,   

இவ்வுலகில் பலருக்குத் தெரிவதுண்டு . 

 

உன் முக சாயலில் நானும் 

என் அக சாயலில் நீயும் 

என எண்ணினாலும்  

உன்னை உணராதது ஏனோ? 

 

மனிதம் வளர்க்கும் மனிதனும் 

மனிதன் வளர்க்கும் மனிதமும்  

மறைந்ததாலோ?


--


சாபம் 


பாசம் கொன்று  

பாசாங்கு காட்டும்  

மனிதப் படைப்பு, 

பணத்திற்கு ஏற்ப  

சாபம் கொடுக்கிறது.  

 

இல்லாதவன் என்றால் 

மண்ணோடு மண்ணாக்கப்  

பார்க்கிறது,  

 

இருப்பவன் என்றால் 

கண்ணாக கரம் 

கோர்த்துக் கொள்கிறது 

 

கண்ணாவதை விட  

மண்ணாவதே மேல்  

உயிர் வளர்க்கும் உணவு கூட 

உயிராக கருவாவது 

மண்ணில் தானே! 

 

உறவை அழிக்கும் சாபம் கூட 

உலர்ந்து போவது உண்மை 

அன்பில் தானே!  


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்