செந்தமிழ் தேன்மொழியாள்!

Feb 21, 2026,12:36 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


கவிஞர் க.முருகேஸ்வரியின் தாய்மொழி தின‌ சிறப்புக் கவிதை தென் தமிழுக்காக...தேன் தமிழில்....!


கன்னித் தமிழ் உன்னில்

காதல் கொண்டு !


தேன்‌ தமிழ் உன்னிடம்

தேடி வந்து!


சங்கத் தமிழ் உன்னுடன்

சங்கமித்திட!




தங்கத் தமிழால் உன்னை அலங்கரித்து!


செந்தமிழ்  கொண்டுனை

சிலையாய் செதுக்கி!


இசைத்தமிழோடு

உன்‌‌னை மீட்டி!


கொஞ்சு தமிழ் 

உனைக் கொஞ்சம் கொஞ்சி!


முத்தமிழே

உனக்குள் முத்துக் குளித்து!


நற்றமிழ் கொண்டு 

நவரத்தினம் பதித்து!


அமுதத் தமிழே

உன்னை ஆராதிக்க!


பைந்தமிழே நான்‌ பாய்ந்து வருவேனம்மா!


வண்ட(டு)மிழாய்‌ மாறி

தேன்தமிழை நித்தம்

பருகிக் களிப்பேனம்மா!!!


கர்வம்‌ பொங்க கவி பாடி

தாய்மொழி தினத்தைக்

கொண்டாடி மகிழ்வேன்

அதுவும்..

 உன்னாலே....உன்னாலே.....


தாயே! என் தமிழ்த்தாயே!...

என்‌ தங்கத் தாரகையே...

என் தாய்மொழி என்னும் தேவதையே


உனைப் பார்த்து நான் வளர்ந்தேன்!

உனைப் போற்ற தான் வளர்வேன்!


என்னோடு நீயும் 

இரண்டறக் கலந்ததனால்

 

என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உருவாக்கித் தந்தவளே!


என் மகிழ்ச்சியும் உன்னாலே!


என்‌ புகழ்ச்சியும் உன்னாலே!


என் எண்ணமெல்லாம் எழுத்தாக

ஏணியாக நின்றவளே!


உன்னை எழுதும்‌ போதெல்லாம் 

என்னை

ராணியாக்கி மகிழ்ந்தவளே....

எனக்கென பிறந்தவளே!


என்‌ உணர்வோடு கலந்தவளே!


கனவினிலும் கண்ணோடு நிறைந்தவளே!


நனவினிலும் நல்வாழ்வு வந்தவளே!


அன்னைக்கு அன்னையாய் ஆனவளே!


தந்தைக்கு தந்தையாய்

தலை கோதியவளே!


துயர் துடைக்க ஓடி வந்த 

என்‌ தூயவளே!


திக்கெட்டும் இன்பங்கள் தேடித் தந்த 

மாயவளே!


தாலாட்டி சீராட்டும்

என்‌ தங்கத் தாயவளே!


வாழ்க நின்‌ புகழ்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்