சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக

Feb 04, 2025,07:09 PM IST

சென்னை: மகாராஷ்டிராவில் எல்லோருமே காங்கிரஸ்தான ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் யாருமே எதிர்பாராத அதிரடியாக ஏக்நாத்  ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. இதனால் மீண்டும் இதே கூட்டணியே அங்கு ஆட்சியமைத்தது. அந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த நபர்தான் தற்போது தமிழ்நாட்டில் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். 


ராபின் சர்மா.. இவர்தான் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே - பாஜக - அஜீத் பவார் கூட்டணியின் வெற்றிக்கான ஸ்கிரிப்ட்டை எழுதியவர். இதே ராபின் சர்மாதான், ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் - பவன் கல்யாணின் ஜன சேனா கூட்டணியின் வெற்றிக்கும் உதவியவர். இதே ராபின் சர்மாதான் தற்போது திமுகவுடன் கை கோர்த்துள்ளார்.


மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் ராபின் சர்மாவின் உத்திகளுக்குக் கிடைத்த வெற்றியால் தற்போது அவர் அகில இந்திய அளவில் கிராக்கியான ஒரு நபராக மாறியுள்ளார். அவரது உதவியைத்தான் தற்போது திமுக நாடியுள்ளதாம். 


தேர்தலுக்குத் தயாராகும் தமிழ்நாடு




2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. என்னதான் 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தாலும் அதைப் பெறுவது அத்தனை எளிதாக இருக்காது. பல நலத் திட்டங்களை திமுக நிறைவேற்றியிருந்தாலும் கூட அதையும் மீறி தற்போது விஜய் ரூபத்தில் பெரும் சவால் வந்துள்ளது. விஜய்யின் பலம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கூட அவரை குறைத்து மதிப்பிடவும் முடியாது.  இது பல தேர்தல் களங்களைக் கண்ட திமுகவுக்கும் நன்றாக தெரியும்.


அதிமுக பலமிழந்த கட்சியாக இருந்தாலும் கூட இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. மறுபக்கம் நாம் தமிழர் கட்சி வளர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி நிற்கிறது. விஜய்யும் வந்து விட்டார். பாஜகவும் கடுமையான தாக்குதல் நடத்த காத்திருக்கிறது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் மிஸைல்களை நிறுத்தியதுபோல எதிர்த் தரப்பு காத்திருப்பதால் திமுகவும் தன்னை பலமானதாக மாற்றிக் கொள்ள தொடங்கியுள்ளது.


இதற்காகத்தான் ராபின் சர்மாவை களத்தில் இறக்கியுள்ளதாம் திமுக. திமுகவின் தேர்தல் உத்திகள், பிரச்சார உத்திகள்,  வேட்பாளர் தேர்வு என பல்வேறு அம்சங்களிலும் திமுகவுக்கு உதவி செய்யப் போகிறதாம் ராபின் சர்மா டீம். வேட்பாளர் தேர்வுதான் முக்கியமானது என்பதால் அதில் ராபின் சர்மா டீம், திமுகவுக்கு பெரிய அளவில் உதவி செய்யத் திட்டமிட்டுள்ளதாம்.


யார் இந்த ராபின் சார்?




சமீபத்தில் யார் அந்த சார் என்ற வார்த்தை மிகப் பெரிய அளவில் வைரலானது. அதிமுகவின் பிஆர் டீம் வகுத்த உத்தி இது. பெரிய அளவில் மக்கள் மத்தியில் இது ரீச் ஆனது. இதை முறியடிக்க திமுக தரப்பு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்த போதிலும் கூட இந்த வார்த்தை தமிழ்நாட்டில் பிரபலமாகி விட்டது. அந்த வகையில் இதை ஒரு பின்னடைவாக கருதுகிறதாம் திமுக. எனவே வரும் காலத்தில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் இதுபோன்ற உத்திகளைக் கையில் எடுத்தால் சரியான பதிலடி உத்தியை கொடுக்கவே ராபின் சர்மா டீமை இப்போதே நியமித்துள்ளனராம்.


சரி ராபின் சர்மா டீமின்  பாணி எப்படி இருக்கும்.. இதைத் தெரிந்து கொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதற்கு ராபின் சர்மா, மகாராஷ்டிரா தேர்தல் குறித்து அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்ததைக் கவனிக்க வேண்டும். மகாராஷ்டிர வெற்றி குறித்து ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தபோது ராபின் சர்மா கூறியதாவது:


இந்தத் தேர்தலில் பெண்களின் பங்குதான் மகத்தானது. அவர்களைத்தான் நாங்களும் குறி வைத்துக் களம் இறங்கினோம். மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பெண்களுக்கான உதவித் தொகை திட்டத்தை (லட்கி பெஹின் திட்டம்) செயல்படுத்தியது. இதன் மூலம் பெண்களுக்கு நிதியுதவித் தொகை கிடைக்க ஆரம்பித்தது. இது அவர்களை பல வழிகளில் உயர்த்த உதவியது. அவர்களது ஸ்டேட்டஸ் மாறியது. அவர்கள் கையிலும் காசு இருந்தது. யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவானது.


இந்தப் பெண்கள் அரசு தரும் இந்த நிதியை எப்படி செலவழிக்கிறார்கள் என்று நாங்கள் டேட்டா எடுத்துப் பார்த்தோம். தங்களது தேவைகளை நிறைவேற்ற இந்தப் பணம் அப்பெண்களுக்கு உதவியாக இருந்தது. சத்தான உணவு சாப்பிட இதை அவர்கள் பயன்படுத்தினர். பணத்தை பலர் சேமித்து வைத்து பெரிய பெரிய செலவுகளுக்குப்  பயன்படுத்தினர்.


மகாராஷ்டிராவில் இப்படி பெண்களுக்கு உதவித் தொகை வழங்குவது என்பது இப்போதுதான் நடந்துள்ளது. எனவேதான் பெண்களின் வாக்குகள் பெருமளவில் ஷிண்டே கூட்டணிக்குக் கிடைத்தது என்றார் ராபின் சர்மா.


திமுகவின் டிரம்ப் கார்டு திட்டங்கள்




இந்த லட்கி பெஹின் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 21 முதல் 65 வயது வரையிலான பெண்களுக்கு ரூ. 1500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் திமுக அரசால் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வழங்கப்படுவது நினைவிருக்கலாம். இந்தத் திட்டம்தான் திமுக அரசுக்கும் பெயர் பெற்றுக் கொடுத்தது. ஷிண்டேவுக்கும் இதுதான் பெயர் வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தத் திட்டம் மட்டுமல்லாமல், மகளிர் விடியல் பேருந்து என்ற பெயரில் இலவச பஸ் பயணம், மாணவியருக்கு பல்வேறு வகையான திட்டங்கள் என்று பெண்களுக்கான திட்டங்கள் பலவற்றை திமுக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் பலன்களை உடனுக்குடன் மக்களும் அனுபவித்து வருவதால் இவையெல்லாம் வாக்குகளாக மாறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் திமுக உள்ளது.


கண்ணுக்கு எதிரில் தன்னை வீழ்த்தக் கூடிய வகையிலான எதிரிகள் இல்லை என்றாலும் கூட எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள திமுக தயாராக இல்லை. எனவேதான். ராபின் சர்மா டீமை வைத்து தனது எதிராளிகளுக்கு அதிரடி காட்ட தீவிரமாக திட்டம் தீட்டியுள்ளது திமுக.


கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் திமுகவுக்காக பணியாற்றினார். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது திமுக. பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. வருகிற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, அதிமுகவுக்கு பதிலடி கொடுக்க திமுக வேகமாக உள்ளது. இதனால்தான் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு வருட காலம் அவகாசம் இருக்கும் நிலையிலும் கூட இப்போதிருந்தே திமுக பல வகையிலும் தன்னைத் தயார் படுத்த ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!

news

சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்

news

மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!

news

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு

news

கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!

news

இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!

news

மீன் குழம்பு வச்சு.. அதுல கொஞ்சம் விஷம் கலந்து.. கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!

news

Valentine's day: காதலில் உயிர்த்து இருப்பவன் நான்.. நிறைந்து நிற்பவள் நீ.. இணைந்து நிற்பது நாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்