- மைதிலி அசோக்குமார்
சங்க இலக்கியங்களைப் படிக்கப் படிக்க தித்திக்கும் தேன் துளி போல மனசெல்லாம் திக்குமுக்காடும். அத்தனை அருமையான சொல் விருந்தையும், சுவை விருந்தையும் நமக்கு அள்ளித் தந்து சென்றுள்ளார்கள் நமது புலவர்கள்.
அக நானூறும், புறநானூறும் அற்புதமான இலக்கியக் களஞ்சியங்கள். அதில் புறநானூறிலிருந்து ஒரு பாடலை இப்போது உங்களுக்காக தருகிறோம்.
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: வேள் ஆய் அண்டிரன்
திணை: பாடாண் திணை
துறை: வாழ்த்து
இந்த பாடலில் வேள் ஆய் அண்டிரனின் நாட்டின் வளமையும், அவன் கொடைத் தன்மையும், வீரமும் விளங்கப் பெருகிறது.

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே
விளக்கம்:
1.ஊர்ப் பொதுவான மன்றத்தில் வளர்ந்திருந்த பலா மரத்தின் பெரிய கிளையில் வாழ்கின்ற மந்தி
2. பரிசில் பெற்று வருபவர்கள் தொங்கவிட்டிருந்த - நன்கு வாரினால் இழுத்து கட்டப்பட்டிருந்த முழவு என்ற மத்தளத்தை
3. பலாப்பழம் என்று கருதி அந்த இடத்தில் அடித்து இசை எழுப்ப
4. ஆண் அன்னப்பறவை அச்சத்தால் மாறுபட்ட ஒலி எழுப்பும்
5. தொடி என்ற வீரக் கழல் அணிந்துள்ள ஆய் மன்னனின் மழை மேகம் தவழும் பொதியின் மலை
6. ஆடல் மகளீர் விரலியர்கள் நெருங்கிச் செல்லாமே அன்றி
7. பெருமை கொண்ட வேறு எந்த மன்னரும் நெருங்கி செல்லுதல் அரிது
என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் மன்னன் வேள் ஆய் அண்டிரனின் பெருமையைப் பாடியுள்ளார்.
குறிப்பு:
1.இரவலர் தங்கள் வாத்தியங்களை மரத்தின் கிளையில் தொங்க விடுதல் மரபு
2. குரங்குகள் பலாப்பழத்தையே கண்டு பழகியது .
3. பாணரும், விறலியரும் பரிசில் பெறுவதற்காக மட்டுமே நெருங்க முடியும் . வேறு யாரும் நெருங்க முடியாத வல்லமை உடைய வீரம் பொருந்தியவன் வேள் ஆய் அண்டிரன்.
அருஞ்சொற்பொருள்:
இரவலர் - மன்னரை புகழ்ந்து பாடி பரிசில் பெற வருபவர்கள்
விசித்தல் - கட்டுதல்
விசி கூடு முழவு - நன்கு கட்டமைக்கப்பட்ட மத்தளம்
கனி செத்து அடிப்பின் - மத்தளத்தை பலாப்பழம் என்று கருதி தட்டி ஒலி எழுப்பியது.
ஆடு மகளீர் - விறலியர்கள்
(மைதிலி அசோக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
சந்தோஷம்!
நம்பிக்கை அதானே எல்லாம்!
அன்பு மகிழ்ச்சியைப் பரப்பும் ஹோலி.. Bonfire of Unity: India’s Vibrant Celebration
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
“பாடம் புரிஞ்சுடுச்சு”.. மனிதம் மலர்கையில் – பகுதி 4
அடியார்க்கும் அடியேன்.. இளையான்குடி மாற நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு
{{comments.comment}}