சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

Jan 20, 2025,10:33 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சேலம் : சேலம் செவ்வாய்பேட்டை தேவாங்கபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருவிழா ஜனவரி 13ம் தேதி துவங்கி, ஜனவரி 18ம் தேதி வரை  தொடர்ந்து 6 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


தேவாங்கர் சமூகத்தினரின் குல தெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ செளடேஸ்வரி அம்மனுக்கு சேலம் செவ்வாய்பேட்டையில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு செளடேஸ்வரி அம்மனுக்கு வீரகுமாரர்கள் அலகு சேவையுடன் திருவிழா நடத்தி, வழிபட்டு வருவது செவ்வாய்பேட்டையில் உள்ள தெலுங்கு தேவாங்க குலத்தினரின் வழக்கமாக உள்ளது. இந்த திருவிழா 6 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கி, ஜனவரி 18 ம் தேதி வரை ஸ்ரீஇராமலிங்க செளடேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் வடக்கு வாசல் முன் அமைந்துள்ள அலங்காரப் பந்தலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.




ஜனவரி 13 காலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய இவ்விழாவில் கங்கணம் கட்டிக் கொண்டு, பலரும் விரதம் இருக்க துவங்கினர். பொங்கல் தினமான ஜனவரி 14  அன்று சக்தி அழைப்பு  நடைபெற்றது. தேவஸ்தானம் கிழக்கு வாசல் கோவிந்தன் தெருவில் இருந்து மங்கல இசை முழங்க வீரகுமாரர்கள் அலகு சேவையுடன் சக்தி அழைப்பு நடைபெற்றது. வீரகுமாரர்கள் கத்தி போட்டபடி தெருக்களில் ஊர்வலமாக செல்ல, அவர்களின் பின்புறத்தில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் பவனி வந்தது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.  சிறுமியர்கள், பெண்கள் ஆகியோரின் கோலாட்டமும் நடைபெற்றது.


ஜனவரி 15 ம் தேதி பண்டாரி மெரமனை ஊர்வலம் வீரகுமாரர்களின் அலகு சேவையுடன் நடைபெற்றது. ஜனவரி 16 ம் தேதி பால்குடம் மெரமனை மங்கல இசை முழங்க, வாணவேடிக்கையுடன் திருமஞ்சன ஊர்வலம் நடைபெற்றது.  மாலையில் திருவிளக்கு பூஜையும் நடத்தப்பட்டது. ஜனவரி 17 ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான பானக மெரமனையும், மாலையில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் இருந்து மஹாஜோதிக்கான புனிதப் பொருட்களை மெரமனையுடன் ஜோதி புறப்படும் நிகழ்வு நடைபெற்றது. 


10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் ஒன்றிணைந்து கோவிலில் மஹாஜோதிக்கான மாவு இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணியளவில் மஹாஜோதி ஸ்ரீ நடராஜர் பஜனை மடத்தில் இருந்து மங்கல வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க மகளிரணியின் கோலாட்டம், வாணவேடிக்கை மற்றும் வீரகுமாரர்கள் அலகு சேவையுடன் ஊர்வலமாக புறப்பட்டது. தேவஸ்தான அர்ச்சகர் கங்காள.திரு.எம்.துரைபாபு ஜோதி எடுத்து செல்ல, அனைத்து தெருக்களிலும் மஹாஜோதி வலம் வந்தது. மஹாஜோதி வீதியில் வலம் வரும் சமயத்தில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஆகியவை வைத்து, விளக்கேற்றி, ஜோதிக்கு மரியாதை செலுத்தி வழிபட்டனர். மஹாஜோதியை ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிற்கு அழைப்பதாக ஐதீகம். 




ஜனவரி 18 மஞ்சள் நீர் மெரமனையும், இரவு தங்க ரத ஊர்வலமும் நடைபெற்றது. விழாவின் ஆறு நாட்களும் மாலையில் ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் ஊர்வலத்தின் போது வாழைக்காய் வெட்டும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, அம்மனிடம் வேண்டிக் கொண்டவர்கள் வரிசையாக படுத்திருக்க அவர்களின் வயிற்றின் மீது வாழைக்காய் வைத்திருப்பார்கள். வீரகுமாரர்கள் தங்களின் வாளால் அந்த வாழைக்காயை இரண்டாக வெட்டுவார்கள். இந்த வாழைக்காயை குழந்தை இல்லாத தம்பதிகள், கணவன்-மனைவி மட்டும் சமைத்து சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


சதாபரணத்துடன் இந்த ஆண்டிற்கான திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. சதாபரணத்தன்று ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பவனி வந்தது காண்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்