Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

May 02, 2026,11:00 AM IST

- பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு


அவள் பெயர் வான்மதி. பிறவியிலேயே இடது கை செயலிழந்து பிறந்தாள். கிராமத்தில் பிறந்தாலே போதும், குறை சொல்ல ஆள் காத்திருக்கும். இவளுக்கோ குறையோடு பிறப்பு. “பொட்டப்புள்ள, அதுலயும் ஊனம். இதெல்லாம் என்னத்துக்கு ஆகும்?” என்று உறவினர்கள் முகத்துக்கு நேராகவே பேசினர்.


பள்ளிக்குப் போன முதல் நாள், சில பிள்ளைகள் “கை இல்லாதவள்” என்று கூப்பிட்டார்கள். ஆசிரியை கனகம் டீச்சர் மட்டும் அவள் தலையைத் தடவினார். “கண்ணு, உனக்கு இன்னொரு கை இருக்கு. அது உன் மனசு. அது போதும்” என்றார்.


வான்மதிக்குப் படிப்பில் ஆர்வம். ஆனால் வலது கையால் மட்டும் எழுதுவது மெதுவாக இருந்தது. பரீட்சையில் எல்லோரும் எழுதி முடிக்கும்போது இவள் பாதிதான் முடித்திருப்பாள். மதிப்பெண் குறையும். வீட்டுக்கு வந்து அம்மா மடியில் அழுவாள்.


ஆறாம் வகுப்பில் ஓவியப் போட்டி. எல்லோரும் கலந்துகொண்டார்கள். வான்மதியும் பெயர் கொடுத்தாள். வகுப்பு பிள்ளைகள் சிரித்தார்கள். “உன்னால வரையவே முடியாது. போட்டியில கலந்துக்கப் போறியா?”




அன்று இரவு அப்பா கேட்டார், “வேணாம்டா. அவமானப்படுவ. விட்டுடு.”  

வான்மதி தலைநிமிர்ந்தாள். “இல்லப்பா. நான் வரையறது யாருக்காகவும் இல்ல. எனக்காக. என்னால முடியும்னு எனக்குத் தெரியணும்.”


ஒரு மாதம் பயிற்சி. காலையில் 5 மணிக்கு எழுந்து வலது கையால் வரையப் பழகினாள். முதலில் கோடு கோணலாகப் போகும். அழிப்பாள். மீண்டும் வரைவாள். விரல் வலிக்கும். ஈரத்துணி சுற்றிவிட்டு மீண்டும் வரைவாள்.


போட்டி நாள். தலைப்பு: “என் கிராமம்”. எல்லோரும் 1 மணி நேரத்தில் வரைந்து முடித்தார்கள். வான்மதிக்கு நேரம் போதவில்லை. பாதி படம் வரைந்திருந்தாள். நடுவர்கள் வந்தார்கள். அவள் கையைப் பார்த்தார்கள். பாதி படத்தைப் பார்த்தார்கள்.


ஒரு நடுவர் கேட்டார், “ஏம்மா, முடிக்கலையே?”  

“ஐயா, எனக்கு ஒரு கைதான். ஆனா அந்த ஒரு கையால நான் வரைஞ்சது முழு மனசு. கிராமத்துல பாதி வீட்டுல விளக்கு எரியுது. மீதி வீட்டுல இருட்டு. அதான் பாதி படம். விளக்கு இல்லாத வீட்டுக்கும் வெளிச்சம் வரணும்னு ஆசை. அதான் என் ஓவியம்.”


சபை அமைதியானது. பாதி வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசு. காரணம் சொன்னார்கள்: “கை குறை. ஆனால் கருத்து நிறை.”


அன்று தொடங்கியது அவள் பயணம். மாவட்ட அளவு, மாநில அளவு, தேசிய அளவு ஓவியப் போட்டிகள். பரிசுகள் குவிந்தன. பத்திரிகைகளில் பேட்டி. “ஒற்றைக் கை ஓவியர்” என்று தலைப்பு.


+2 முடித்ததும் BFA சேர்ந்தாள். படித்து முடித்து இன்று அதே கிராமத்தில் “வண்ணம்” என்ற பெயரில் இலவச ஓவியப் பயிற்சி மையம் நடத்துகிறாள். கை, கால் ஊனமுற்ற 30 பிள்ளைகளுக்கு வரையக் கற்றுக்கொடுக்கிறாள்.


போன மாதம் அவள் மையத்துக்கு ஒரு சிறுமி வந்தாள். பேச்சு வராத குழந்தை. அம்மா அழுதுகொண்டே சொன்னாள், “என் பொண்ணால எதுவும் முடியாதுனு எல்லாரும் சொல்றாங்க டீச்சர்.”  

வான்மதி அந்தக் குழந்தையின் கையில் பிரஷ் கொடுத்தாள். “குறை இருக்கலாம். ஆனா கனவு இருக்கக் கூடாதுனு யார் சொன்னா? வா, வரைவோம்.”


உலகம் உன் குறையைப் பார்க்கும். நீ உன் நிறையைப் பார். ஒரு கதவு மூடியிருந்தால், இன்னொரு கதவு இருக்கு. அதைத் திறக்க வேண்டியது உன் தன்னம்பிக்கை. தடைகள் கல்லு இல்லை. படிக்கல்.


என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் இன்று என் மாணவர்களைப் பார்த்து வியக்கிறார்கள். ஒரு விரல் இல்லாமல் போனாலும், ஒரு விளக்கு ஏற்ற முடியும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கைதான் இன்று 30 வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறது. உன் குறையைக் காரணம் காட்டாதே. காரியம் செய். வெற்றி உன் வாசல் தேடி வரும்.


(பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு, உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி , பட்டுக்கோட்டை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!

news

tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்