லட்சக்கணக்கில் பணம் கொடுத்து.. கஷ்டப்பட்டு அமெரிக்காவுக்குப் போய்.. இந்தியர்களின் துயரக் கதை!

Feb 06, 2025,06:47 PM IST

டெல்லி: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக ஒவ்வொரு இந்தியரும் புரோக்கர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்துள்ளனர். அபாயகரமான பாதைகள் வழியாக இவர்கள் பல நாடுகள் வழியாக பயணித்து அமெரிக்காவுக்குள் ஊடுறுவியுள்ளனர். இப்படி சிரமப்பட்டு அமெரிக்காவுக்குள் ஊடுறுவி தற்போது எல்லாக் கனவுகளும் தகர்ந்து போய் தாயகம் திரும்பியுள்ளனர் இந்த இந்தியர்கள். இவர்களின் கதையைப் பார்த்தால் படு சோகமாக இருக்கிறது.. ஆனால் இதெல்லாம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.


அமெரிக்கா என்பது இன்னும் கூட பல நாட்டவர்களுக்கு ஒரு இனிய கனவாகவே இருக்கிறது. பல வகையிலும் அமெரிக்கா இன்னும் உலக நாடுகளை ஈர்த்தபடிதான் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில், அமெரிக்க கனவுகளுடன் இருக்கும் இந்தியர்கள் அதிகம். படிக்கப் போவது, வேலை பார்க்கப் போவது, அங்கேயே செட்டிலாக நினைப்பது என்று பலவிதமான கனவுகளுடன் பல இந்தியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 


சட்டவிரோத குடியேற்றம்




ஆனால் அமெரிக்காவில் குடியேறுவது என்பது அத்தனை எளிதானதல்ல. இதனால்தான் பல நாட்டவர்களும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் செல்ல முயல்கிறார்கள். அப்படிப் போனவர்களைத்தான் தற்போது டிரம்ப் அரசு வெளியேற்ற ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்கள் இதற்காகவே உள்ள புரோக்கர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள். பல்வேறு அபாயகரமான பாதைகள் வழியாக அமெரிக்காவை நோக்கிய பயணத்தில் ஈடுபடுகிறார்கள். உயிரைப் பணயம் வைத்துத்தான் அவர்கள் செல்ல முடியும். அதில் வழியில் உயிரிழப்புகள் நிகழ்வதும் உண்டு. எதற்குமே உத்தரவாதம் இல்லை. ஒரு வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுறுவி விட்டாலும் கூட பலர் பிடிபட்டு கைதாவதும் உண்டு. அப்படிக் கைதானோர் பலர் சிறையிலும் வாடி வருகின்றனர்.


பெரும்பாலும் தென் அமெரிக்கா வழியாகத்தான் பல்வேறு நாட்டவர்களும் அமெரிக்காவுக்குள் ஊடுறுவுகின்றனர். கடல் மார்க்கமாக, அபாயகரமான படகுப் பயணம் என  கடுமையான ரிஸ்க்குகளுக்கு இடையில் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை வழியாகத்தான் பலரும் அமெரிக்காவுக்குள் ஊடுறுவுகிறார்கள். இப்படி ரிஸ்க் எடுத்து அங்கே போய் தங்கியிருந்த 104 இந்தியர்கள் தற்போது ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவும் கூட நாடு கடத்தல்தான்.  அதிலும் இந்தியர்களைக் கைவிலங்கிட்டு விமானத்தில் ஏற்றியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


ரிஸ்க் எடுத்து பயணம்




பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் தஹலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்வீந்தர் சிங். அமெரிக்க கனவுடன் அங்கு ஊடுறுவியவர். இதற்காக அவர் செலவழித்த பணம் ரூ. 42 லட்சம். முதலில் டெல்லியிலிருந்து கத்தாருக்குப் போயுள்ளார். அங்கிருந்து பிரேசிலுக்குப் போயுள்ளார். அங்கிருந்து பெரு நாட்டுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுவதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் அங்கு போன பின்னர்தான் அந்த நாட்டுக்கு விமான சர்வீஸே இல்லை என்று தெரிய வந்துள்ளது. பிரேசிலிலிருந்து பல்வேறு டாக்சிப் பயணம் மூலம் கொலம்பியாவுக்குக் கூட்டிப் போயுள்ளனர். அதன் பின்னர் பனாமா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


அங்கிருந்து படகு பயணம் மற்றும் படகுப் பயணம் முடிந்ததும், மலைப் பாதைப் பயணம் என ரிஸ்க்கியான பயணம் தொடர்ந்துள்ளது. அதன் பின்னர் மெக்சிகோ எல்லை வரைக்கும் ஒரு அபாயகரமான படகுப் பயணத்தை கடலில் மேற்கொண்டுள்ளனர் ஹர்வீந்தர் சிங்கும் அவரைப் போன்ற மேலும் சிலரும். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அபாயகரமான பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.  போகும் வழியில் படகு கவிழ்ந்துள்ளது. அதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்னொருவர் பனாமா காட்டுப் பகுதியில் உயிரிழந்து விட்டார். மற்றவர்கள் எப்படியோ தப்பிப் பிழைத்து போக வேண்டிய இடத்தை அடைந்துள்ளனர். வழியில் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டுள்ளனர்.


அபாயகரமான படகுப் பயணம்




இதேபோலத்தான் ஒவ்வொரு இந்தியரும், பல்வேறு வகையான கஷ்டங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுக்குள் ஊடுறுவியுள்ளனர். சுக்பால் சிங் என்பவர் கடல் மார்க்கமாக 15 மணி நேரம் படகில் பயணித்துள்ளார். 45 கிலோமீட்டர் வரை நடந்துள்ளார். நடப்பது என்றால் சாதாரண சாலைகளில் அல்ல.. மலைப் பாதையில் அதுவும் அபாயகரமான விஷப் பூச்சிகள் உள்ளிட்டவை உள்ள காடுகளில் நடந்துள்ளார். வழியில் யாருக்காவது ஏதாவது காயம் ஏற்பட்டால் அப்படியே விட்டு விட்டுப்  போய் விடுவார்களாம். காயமடைந்தர்கள் அங்கேயே கிடந்து மரணிக்க வேண்டியதுதான்.  போகும் வழியெல்லாம் இதுபோல இறந்து கிடந்த பல உடல்களையும், எலும்புக் கூடுகளையும் பார்த்து மிரண்டு போய் விட்டாராம் சுக்பால் சிங்.


இப்படிக் கஷ்டப்பட்டு மெக்சிகோவை அடைந்த நிலையில் அங்கு அவர் கைது செய்யப்பட்டாராம். 14 நாட்கள் அவரை சிறையில் அடைத்து விட்டார்கள். அது ஒரு இருண்ட அறையாம். வெளிச்சமே இல்லாத அறையில் அடைக்கப்பட்டிருந்தாராம் சுக்பால் சிங். அதேபோல ஆயிரக்கணக்கான பஞ்சாபி இளைஞர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் சிறைகளில் வாடி வருவதாக கூறுகிறார் சுக்பால் சிங்.


சட்டவிரோத பயணம் ஆபத்தானது




நேற்று இந்தியா வந்து சேர்ந்த இந்தியர்களில் 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா, உ.பியைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர். சண்டிகரைச் சேர்ந்தவர்கள் 2 பேர் ஆவர்.  வந்தவர்களில் 19 பேர் பெண்கள், 13 பேர் சிறார்கள்.  தங்களை விமான பயணம் முழுவதும் கை, கால்களில் விலங்கிட்டே அமர வைத்திருந்ததாக கூறினார் ஜஸ்பால் சிங் என்ற இன்னொரு இந்தியர்.


இதெல்லாம் தேவையா இந்தியர்களே.. இனி மேலாவது  தவறான, நியாயமற்ற முறையில், சட்டவிரோதமாக எந்த இடத்திற்குமே செல்ல முயலாதீர்கள்.. நம்ம நாட்டில் இல்லாததா.. புரிஞ்சுக்கங்க.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்