கிரீடங்களை விட, அரசியல் சாசனத்தின் மைத்துளி வலிமையானது!

Jan 26, 2026,01:14 PM IST

- கவிஞர் சு. நாகராஜன்


அது 1929-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி. நள்ளிரவு நேரம்.


தற்போதைய பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில், 'ராவி' நதிக்கரையில் உறைய வைக்கும் குளிர். ஆனால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களின் ரத்தத்தில் சுதந்திர நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த நள்ளிரவில், ஜவஹர்லால் நேரு தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கூடியது. அங்கே அவர்கள் ஒரு முக்கியமான, மூர்க்கமான சபதத்தை ஏற்றார்கள்.


"இனி ஆங்கிலேயரிடம் கெஞ்சப்போவதில்லை. நமக்குத் தேவை பூரண சுயராஜ்யம் (முழுமையான சுதந்திரம்). வருகிற ஜனவரி 26, 1930 அன்றுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினம். அன்றைய தினம் இந்தியா முழுவதும் மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்!" என்று முழங்கினார்கள்.


சொன்னபடியே, அடுத்த 17 வருடங்களுக்கு (1930 முதல் 1947 வரை) இந்திய மக்கள் ஜனவரி 26 தேதியைத் தான் சுதந்திர தினமாக ரகசியமாகவும், சில நேரங்களில் வெளிப்படையாகவும் கொண்டாடி வந்தார்கள்.


ஆனால், விதி வேறு மாதிரி விளையாடியது. நமக்கு சுதந்திரம் கிடைத்தது ஜனவரி 26 அன்று அல்ல; ஆகஸ்ட் 15, 1947 அன்று. இங்குதான் அந்த பெரிய கேள்வி எழுகிறது.


"நாம் 1947-லேயே சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால், இடையில் ஏன் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, மீண்டும் ஒரு ஜனவரி 26 தேதியைத் தேர்ந்தெடுத்து 'குடியரசு தினம்' என்று கொண்டாட வேண்டும்? வெறும் விடுமுறைக்காகவா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் மெய்யியல் இருக்கிறதா?"




இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு எளிய உதாரணத்துடன் (Analogy) புரிந்து கொள்வோம்.


கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டுகிறீர்கள். ஆகஸ்ட் 15, 1947 என்பது அந்த வீட்டின் சாவியை ஆங்கிலேயர்கள் உங்களிடம் கொடுத்துவிட்டு, "இனி இது உங்கள் வீடு" என்று சொல்லிவிட்டுப் போன நாள்.

ஆனால், அந்த வீட்டில் யார் தலைவர்? சமையலறை விதிகள் என்ன? பணம் யார் கையில் இருக்க வேண்டும்? தகராறு வந்தால் யார் தீர்ப்பது? என்பதற்கான "விதிமுறை புத்தகம்" (Rule Book) அப்போது நம் கையில் இல்லை.


1947 முதல் 1950 வரை, இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தாலும், சட்டப்படி நாம் பிரிட்டன் அரசியின் பெயரில்தான் ஆட்சி நடத்தினோம் (இதற்குப் பெயர் Dominion Status). நம்க்கென சொந்த சட்டம் இல்லை.


அந்தச் சொந்த "விதிமுறை புத்தகத்தை" (அரசியலமைப்புச் சட்டம்) எழுதி முடிக்க, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான குழுவுக்குச் சரியாக 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன.

 எழுதி முடித்த பிறகு, அதை எந்த நாளில் நடைமுறைப்படுத்துவது? என்று யோசித்தபோது, 1930-ல் ராவி நதிக்கரையில் எடுத்த அந்த "ஜனவரி 26 சபதம்" நினைவுக்கு வந்தது. அந்தத் தியாகத் தேதியை கௌரவிக்கவே, ஜனவரி 26, 1950 அன்று நம் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.


அன்றுதான் இந்தியா வெறும் "சுதந்திர நாடாக" மட்டுமல்லாமல், "குடியரசு நாடாக" (Republic) மாறியது.


இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அச்சிடப்படவில்லை. அது முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்டது. இதை ஆங்கிலத்தில் அழகிய சாய்வு எழுத்துக்களில் எழுதியவர் பிரேம் பிஹாரி நரேன் ரைசாதா. இதற்காக அவர் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை. அதற்குப் பதிலாக, "ஒவ்வொரு பக்கத்திலும் என் பெயரும், கடைசிப் பக்கத்தில் என் தாத்தா பெயரும் இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.


அசல் கையெழுத்துப் பிரதிகள் இன்றும் நாடாளுமன்ற நூலகத்தில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட கண்ணாடிப் பெட்டியில் (இத்துப்போகாமல் இருக்க) பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.


குடியரசு தின அணிவகுப்பில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றும்போது, 21 குண்டுகள் முழங்கும். இது சரியாக 52 நொடிகள் ஒலிக்கும். நமது தேசிய கீதத்தின் நேரத்தோடு துல்லியமாகப் பொருந்தும் வகையில் கணக்கிடப்பட்டிருக்கும். இது ஒரு தனித்துவமான அறிவியல் மற்றும் ராணுவக் கலை.


குடியரசு தினம் என்பது வெறும் ஒரு அரசு விடுமுறை நாள் அல்ல. அது, சாதாரண மக்களாகிய நாம், மன்னர்கள் ஆட்சிக்கு விடைகொடுத்துவிட்டு, "நமக்கு நாமே ராஜா, நமக்கு நாமே மந்திரி" என்று பிரகடனப்படுத்திய நாள்.


எந்த ஒரு தனி மனிதனும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை என்பதையும், நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு என்பதையும் உறுதி செய்த நாள் இது.


சுருக்கமாகச் சொன்னால்...


ஆகஸ்ட் 15 என்பது ஆங்கிலேயர் நமக்குக் கொடுத்த சுதந்திரம்; ஜனவரி 26 என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொண்ட அதிகாரம்!


அடுத்த முறை யாராவது குடியரசு தினம் என்றால் என்ன என்று கேட்டால், அவர்களுக்கு இந்த ஒரு வரியைச் சொல்லுங்கள்:


கிரீடங்களை விட, அரசியல் சாசனத்தின் மைத்துளி வலிமையானது!


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி: சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : ராஜினாமா செய்தவர்களை வேட்பாளராக்கிய தவெக

news

விஜய்யை DUMMY CM ஆக நினைக்கிறார்களா காவல்துறையினர்.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்