World Book Day: புத்தகங்கள் அறிவை வளர்க்கட்டுமே, சுமையை அல்ல!

Apr 23, 2026,11:22 AM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் உலக புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தையும் அறிவின் மதிப்பையும் உணர்த்துவதற்காக இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. புத்தகம் என்பது மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்லப்படும். அது அறிவையும் அனுபவத்தையும் நமக்கு அளிக்கிறது.


முன்னொரு காலத்தில் பார்த்தால், அதிகமான புத்தகங்களை எடுத்துச் செல்வது பத்தாம் வகுப்பு மாணவர்களோ, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களோ தான். அப்போது சிறிய வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மிகக் குறைவான புத்தகங்களே இருந்தன.


ஆனால் இன்றைய காலத்தில் நிலைமையே மாறிவிட்டது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி. போன்ற சிறிய வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கே பல புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், வேலைப்புத்தகங்கள் என்று ஏராளமாக கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி புத்தகங்கள், அதற்கான நோட்டுகள், அதற்கும் மேலாக வேலைப்புத்தகங்கள் என குழந்தைகளின் பைகளே கனமாகிவிடுகின்றன.




இன்னும் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கியுள்ள சிறிய குழந்தைகள், அந்த கனமான பள்ளிப் பைகளைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது அவர்களுக்கு உடல் சோர்வும் ஏற்படுகிறது. பல குழந்தைகள் அந்த பைகளைத் தூக்கவே முடியாமல் சிரமப்படுகின்றனர்.


குழந்தைகளுக்கு அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கல்வி அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் இன்று பல இடங்களில் புத்தகங்களின் எண்ணிக்கையே அதிகரித்து, அந்த சுமையை குழந்தைகள் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கல்வியின் உண்மையான நோக்கம் குழந்தைகளின் சிந்தனை திறன், படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்தை வளர்ப்பதே ஆகும். அதற்கு புத்தகங்களின் எண்ணிக்கை அல்ல, கற்றுக் கொடுக்கும் முறையே முக்கியம்.


*உலக புத்தக நாளை முன்னிட்டு நாம் சிந்திக்க வேண்டியது ஒன்று – குழந்தைகளின் பைகளை புத்தகங்களால் நிறைப்பதை விட, அவர்களின் மனதை அறிவால் நிரப்ப வேண்டும் என்பதே. புத்தகங்கள் குழந்தைகளுக்கு அறிவை அளிக்கும் கருவியாக இருக்கட்டுமே தவிர, சுமையாக மாறாதிருக்க வேண்டும்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்