மீனவர்களின் கண்ணீர் பயணம்!

Jul 16, 2026,04:19 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


ஆதவனை அல்லலின் மறைவில் நிறுத்தி,

அதிகாலையில் சுறுசுறுப்பை பொன் நகையாக உடுத்தி, 


கடல் மாதாவிடம் வேண்டுதலை புகுத்தி,

கட்டு மரத்தை ஆழிக்குள் செலுத்தி,


கவனத்தை வழிநடத்தும் துடுப்பில் இறுத்தி,

உயிரை பணயமாக்கி புறப்படுவார்கள் நெஞ்சுயர்த்தி,




எதிர்பார்ப்புகளை ஏக்கமாக உள்ளத்தில் கடத்தி, 

உணர்வுகளும் உறையும் உப்பாக விழியுறுத்தி,


உலகத்திற்காகவும் உணவுக்காகவும் உயிருக்காகவும் 

உடல் வருத்தி, 

வலையை வீசுவார்கள்

வங்கத்தில் உட்புகுத்தி,


கனமழை காற்று வேண்டாமென வலியுறுத்தி, 

விண்ணுலக தேவனை இறைஞ்சுவார்கள் கையை வானுயர்த்தி,


உடைமைகளை பறிக்காதேயென

துள்ளுமலையும் 

வேகத்தை 

விரைவுப்படுத்தி,

என்ன செய்வது கரை சேர்க்க வேண்டும் தேகத்தை வலுவாக்கி,


உலை கொதிக்க

உயிர் பிழைக்க 

குடும்பத்தை 

நினைவுப்படுத்தி,

காதலும் பாசமும் கரைகிறது தண்ணீரில் கதையடுக்கி,


பலமணி நேரம் போராடி 

மனதை திடமாக்கி,

பஞ்சபூதத்திலிருந்து விடுதலை பெறுவோம் இலக்கை பலமாக்கி,


எங்கள் உயிரை வாழ்விற்காகவும் 

குடும்பத்திற்காகவும் இரவலாக்கி,

நடைபயிலுகின்றோம் சமூகத்தில் நடை பிணமாகி, 


உப்பு காற்றுடன் 

உலாவரும் உணர்வுகளை உரைத்தேன் நானும் வரிகளாக்கி,

உணர்ந்து பாருங்கள் 

வேதனையின் வலியை

மனிதனாகி.....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்