பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு

Jul 16, 2026,03:43 PM IST

சென்னை: செங்கல்பட்டைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்மாமணி இரா. கலைச்செல்விக்கு பேராசிரியர் அய்க்கண் - வசந்தா நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் காரைக்குடி புத்தகத்  திருவிழா குழு சார்பில் மாநில அளவிலான 24 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா  12 .7. 2026 அன்று நிறைவு பெற்றது. சுமார் 50 அரங்குகளில் பதிப்பாளர்கள் புத்தகங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். 




புத்தகத் திருவிழாவின்  நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் வெகு விமர்சையாக  நடைபெற்றது.   காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ் .மாங்குடி ,வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் , எழுத்தாளர்கள் துரை. அறிவழகன் ,கா. மோகன் ஆகியோருக்கு பேராசிரியர் அயக்கண் இலக்கிய விருதும் வழங்கப்பட்டது. புத்தகத் திருவிழா குழு உறுப்பினர் அருணா தேவி அய்க்கண்  வாழ்த்துரை வழங்கினார்.


காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் மாநில அளவில் நடத்தப்பட்ட பேராசிரியர் அயக்கண் - வசந்தா நினைவு சிறுகதை போட்டிக்கு ஏறத்தாழ 150 சிறுகதைகள்  வரப் பெற்றதில் ,  எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு , முதலிடம் கிடைத்துள்ளது.‌


முதல் பரிசு பெற்ற இரா. கலைச்செல்விக்கு முன்னாள் எம்எல்ஏ எஸ் .மாங்குடி அவர்களால் விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும்  வழங்கப்பட்டது.    




இரா.  கலைச்செல்வி எழுதிய  திருநங்கை  பற்றிய "அவளுக்குள் அவள்"  என்ற சிறுகதை  புத்தகத் திருவிழா குழுவினரால் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும்  மணப்பாறையை சேர்ந்த அறிவுச்செல்வனுக்கு  இரண்டாம் பரிசும்,  சமயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.


இலக்கிய உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் எழுத்தாளர் இரா. கலைச்செல்வி   காரைக்குடி புத்தகத் திருவிழா குழுவினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான   பேராசிரியர் அய்க்கண் - வசந்தா நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்