- சசிகலா விஸ்வநாதன்
சுனிதா பால்கனி ஓரம் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டாள். இங்கே உட்கார்ந்தால், பூங்காவில் விளையாடும் குழந்தைகளையும் பார்க்க முடியும் தரையில் கால் பாவாமல் எப்படித்தான் அந்தக் குழந்தைகளால் ஓட முடிகிறது; என்ற வியப்பு, அவளுக்கு ஒரு நாளும் தணிவதே இல்லை.
கால்களில் சக்கரம் கட்டியிருப்பது போல் ஓடுவதையும் சாடுவதையும் அவள் தினம் தினம் பார்த்தும், அலுக்காத பொழுது போக்கு. கைகளை விரித்து அவர்கள் வட்டமிட்டு ஓடுகையில் , இரு கைகளுக்கு பதில் இரண்டு சிறகுகள் முளைத்து எழுந்தன போல்,சுனிதாவுக்குத் தோன்றும். தானும் அவர்களுடன்,பறந்து பறந்து விளையாடுவதுபோல் ஒரு எண்ணம் தோன்றும்; கூடவே ஆற்றாமையிலும் லேசான பொறாமையிலும் நெஞ்சு சற்றே விம்மித் தணியும்.
இன்னும் சிறிது நேரம்தான். அந்த விளையாட்டுத்திடல். களைகட்டி விடும். கால்பந்து விளையாடும் இளையோர்களின் உற்சாகக் கூக்குரல் அலையலையாய் எழும்பி இவளை மூழ்கடித்து விடும். அந்தரத்தில் உயரமாக எழும்பும் பந்தை,அதற்கு இணையாக குதித்து காலாலோ, தலையாலோ தட்டி விட்டு களிப்புடன் கூச்சலிடும் அந்த ஓலம், இவள் நாளங்களை புது ரத்தம் பாய்ச்சி, நரம்புகளை சூடேற்றும் விந்தை, அவளுக்கு,மிகவும் பிடிக்கும். சில சமயம் அந்த பந்துக்கு பதிலாக தானே இங்கும், அங்கும் உதை பட்டு பறப்பதாக நினைத்துக் கொள்வாள்.

இருள் கவியத் துவங்கியது. கையில் இருந்த காஃபி ஆறிப்போய் ஆடை படிந்து நீர்த்துப் போய் இருந்தது. உதை பந்து விளையாட்டு முடிந்து, எல்லோரும் இல்லம் கிளம்ப தயாராகிக் கொண்டு இருந்தனர். அவளே விறு விறுப்பாக விளையாடி முடித்த களைப்பை அடைந்திருந்தாள்.அவள் பின்னால் ஒரு சலனம்.'அக்கா! ஃபிஸியோதெரப்பிஸ்ட் அண்ணன் வந்து விட்டார். நீங்க உள்ள வாங்க. நான் வேற காஃபி எடுத்திட்டு வரேன்.' என்றவாறே சுனிதாவின் சக்கர நாற்காலியை திருப்பி உள்ளே உருட்டி கொண்டு போனாள்;பணிப்பெண் கருத்தம்மா. ஹால் சுவர் முழுக்க மாட்டியிருந்த படங்களில் விளையாட்டு வீராங்கனை சுனிதாவின் வியர்வையில் குளித்த முகம் வெற்றிக் களிப்புடன் மின்னிக் கொண்டிருந்தது.
பிஸியோதெரபிஸ்ட் ராம்ஜி, ' மேடம் இன்னும் ஆறே மாதத்தில் நீங்கள் எழுந்து நடப்பீர்கள். முதலில் அதை, நீங்கள் நம்ப வேண்டும். இரண்டு வருடங்களில் நீங்கள் ஆடுகளத்தில் இருப்பீர்கள். தொடர்ந்து பயிற்சிகளை செய்து கொண்டு வாருங்கள். அதோடு, பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் நடக்கும் விளையாட்டுக்களையும் ஒடிக் களிக்கும் குழந்தைகளையும் நீங்கள் அவசியம் பார்த்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுவது, உங்கள் மனதிற்கு கண்டிப்பாக தெம்பைத் தரும். அதுவும் சிகிச்சையில் ஒரு முக்கிய காரணிதான்.
பொறுமையாகவும், நம்பிக்கையாகவும், துணிவுடனும் இருங்கள். இறுதியில் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும், என்றான். சுனிதாவும் புன்னகையுடன் தலையசைத்து உடல் பயிற்சிக்கு தயாராக முனைந்தாள்.
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
அழகிய மாற்றம்!
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
மறக்க முடியுமா!
{{comments.comment}}