இணைய வகுப்பு

Jun 29, 2026,01:07 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


குழலி, மின்னல் என இயங்கிக் கொண்டிருந்தாள். இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் சாரதியை, இணைய வகுப்பிற்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். சீருடை மற்றும் காலணி அணிவித்து கணினி முன் அவனை அமர்த்தி, விட்டு, வீட்டு கணினியை ,அவன் வகுப்பு கணினியுடன் இணைத்தாள்.


சாரதி! "சிட் டௌன்!" " லுக் அட் மீ " பி அடென்டிவ்" என்னும்  டீச்சரின்  குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. 


பத்து நிமிடங்களில்  சாரதி,"த மீட்டிங் இஸ் களோஸ்ட் டுடே. வில் மீட் டுமாரோ அட்  திஸ்  சேம் டைம்" என்ற சாரதியின் குரல் கேட்டது.  


குழலி  சுதாரித்துக்  கொள்ளும் முன், சாரதி அறையிலிருந்து ஓடி வந்து,"தாத்தா! " என்றவாறு தாத்தா ஆராவமுதன் முதுகைக் கட்டிக் கொள்ள, "என்னடா! அதற்குள்ளாகவா, க்ளாஸ் முடிந்தது", என்று கேட்டார். " ஆராவமுதன்.’தாத்தா! அந்த மிஸ் என்னைப் பேசவே விட மாட்டேங்கிறா; நீங்க இப்படித்தானே மீட்டிங்கை முடிக்கிறீங்க,, அதனால் உங்களப் போல்  நானும் கிளாசை முடிச்சுட்டு வந்துட்டேன்..’ என்றான்.


குழலி தலையில் கை வைத்து ஆயாசத்துடன் தரையில் உட்கார, பேராசிரியர் தாத்தா  ஆராவமுதன் புன்னகைத்தார். ஏழு வயது குழந்தைக்கு என்ன தெரியும்?


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்