சரணாகதி

Sep 02, 2026,02:54 PM IST

- சுதா திருநாராயணன்


திருவரங்கம் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. 


அப்படியா, !ஐயகோ! யான் என் செய்வேன்? எங்களுக்கு இனி யார் வழிகாட்டி ? உங்களைப் பிரிந்து எங்களால் எப்படி வாழ முடியும் ? போன்ற கோஷங்கள் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பக்தர்களும் அடியார்களும் பிதற்றிக் கொண்டும் பினாத்திக் கொண்டும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். 


எல்லாவற்றிற்கும் ஒரே காரணம். 120 வரை வாழ்ந்த மகான் ராமானுஜர் தன் உலக வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டார். மனித வாழ்வின் எல்லையை கடந்து இவ்வளவு நாள் வாழ்ந்து விட்டதால் தம் திருமேனியை விட்டு விட விரும்பினார்.  அரங்கன் முதலில் பேசாமல் இருந்தாலும் ஸ்ரீ ராமானுஜரின் கனிவு மிக்க விண்ணப்பத்திற்கு செவி சாய்த்து விட்டார்.   


மடத்திற்குச் சென்ற ஸ்ரீ ராமானுஜர் தாம் இவ்வுலகை விட்டு செல்ல விரும்புவதை சிஷ்யர்களிடம் அறிவித்து சிந்தனைகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி  யோக நிலையை மேற்கொண்டார்.  தமிழ் வேதம் செழிக்கவும்,  ஒருமைப்பாட்டு உணர்வு மேன்மையுறவும், கோயில்களில் நெறிமுறை சீர் பெறவும் அவதரித்த மிகச் சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி ஸ்ரீ ராமானுஜர்.   


ஜீயபுரத்தில்  வண்ணான் பொன்னனின் மனைவி பொன்னி "மச்சான் செய்தி கேட்டியா? " என்று கண்ணீரும் கம்பலையுமாக தான் கேள்விப்பட்டதை எடுத்துரைத்தாள். ஒரு கணம் திக்பிரமித்து நின்றான் பொன்னன். ஓரிரு முறையே மகான் ராமானுஜரை சந்தித்திருந்தாலும் அவருடைய சிஷ்யனாக உபதேசங்களை கேட்கும் வாய்ப்பு அவனுக்கு இதுவரை கிட்டவில்லை. கை வேலையை அப்படியே விட்டுவிட்டு ஸ்ரீரங்கத்தை நோக்கி ஓடலானான்.  பாதை வழியாக சென்றால்  தாமதமாகும் என்று காவிரியில் குதித்து ஸ்ரீரங்கத்தை நோக்கி நீந்தத் தொடங்கினான் .




மடத்தில் இருந்த அடியவர்கள் குருநாதா தாங்கள் இல்லாமல் எங்களால் உயிர் வாழ இயலாது. எங்களுடைய தாய் தந்தை செல்வம் குரு அனைத்தும் தேவரீரே! ஆகையால் எங்கள் பொருட்டு மேலும் சில காலம் உயிரோடு இருந்து அடியார்களை காத்தருள வேண்டும் என்று உருக்கமுடன் பிரார்த்தித்தனர்.


உயிருக்குயிரான சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இப்பூவுலகில் மேலும் மூன்று தினங்கள் உயிர் வாழ்வதாக ஸ்ரீ ராமானுஜர் ஆறுதல் அளித்தார்.


பல்வேறு உபதேசங்களை திருவாய் மலர்ந்தருளினார். அடியார்களும் பக்தர்களும் புடை சூழ ஸ்ரீரங்கம் காவிரியில் தீர்த்தாமாட சென்றார் ராமானுஜர். காவிரி பிரவாகமாய் ஓடிக்கொண்டிருந்தது. ராமானுஜரின் திருவடிகளில் ஏதோ இடறியது.


தண்ணீருக்குள் பொன்னன் அவர் காலடியில் கிடந்தான். பதறிப் போன ராமானுஜர் அவனை எழுப்பினார். எனக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க சாமி. கூப்பிய கரங்களுடனும் கண்களில் கண்ணீருடனும் பொன்னன் ஸ்ரீ  ராமானுஜரிடம் யாசித்தான்.


அருவியாய் வந்து விழுந்தன 72 வாக்கியங்கள்.


1) இந்திரியங்களுக்கு கட்டுப்படாதே.

2)நிலையில்லாத அறிவை வைத்து திருப்தி அடையாதே.

3)அடியவர்களுக்கும் பக்தர்களுக்கும்  முன்னால் நீ தற்பெருமை கொள்ளாதே.

4)இறைவன் பக்தன் புனிதமானவன் ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டிக்கொண்டு உட்காராதே.


"தன்யனானேன்  ஸ்வாமி "


பொன்னன் சரணாகதி அடைந்தான்.


"ஓம் நமோ நாராயணாய" என்ற கோஷம் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.

   

ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்