சிவகணங்களே காணாத ஈசனின் திருத்தோற்றம்.. அன்னை தடாதகை - 11

Aug 17, 2026,02:46 PM IST

- நவீன் ஸ்ரீதர்.வி


கடந்த தொடரில் பாண்டிய பேரரசியான தடாதகை திருக்கயிலையை அடைந்து ஈசனுடன் போரிடச் சென்று , பின் அவர் மனதை வென்று திருமண தகவலுடன் மதுரைக்கு வந்த நிகழ்வைப் பற்றிப் பார்த்தோம். திருமண நாளை எதிர்பார்த்து மதுரையும் ஒட்டுமொத்த பாண்டிய நாடும் பூரித்து காத்திருந்தது. பாண்டிய நாடே விழாக்கோலம் பூண்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் மதுரையில் திரண்ட வண்ணம் இருந்தனர்.


பல்வேறு இடங்களிலிருந்தும் ஞானிகளும், சித்தர்களும், யோகிகளும்  மதுரைக்கு வருகை தந்தனர். அன்று இமயமலையில் பார்வதி பரமேஸ்வரரின் திருமணத்தை காண உலகே ஒரு முனையில்  திரண்டு வடக்கும் தெற்கும் சமநிலை இழந்ததே.. அப்போது நடந்த திருமணத்தைவிட மிகப்பிரமாண்டமாக இத்திருமணம் நடக்கவிருந்தது. 


நகரெங்கும் மக்கள் தெருக்களை சுத்தம் செய்து பந்தல்கள்,சாரங்கள் அமைத்து தயாராகினர். பாண்டிய அரண்மனையோ மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தது. பலரும் மிக உயர்த பட்டுப்புடவைகளையும் ஆபரணங்களையும் தங்கள் பேரரசிக்கு மனமுவந்து காணிக்கை தந்தனர். மதுரை நகரில் செல்வ மழை பொழிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் திருவிழா தான். ஆம்! மக்கள் அனைவரும் அரசி தடாதகையை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே கருதி அனைத்து வேலைகளையும் செய்தனர். 




தடாதகையின் அருள் அலை நகரெங்கும் மேலோங்கியது. விவசாயிகள் அனைவரும் தங்கள் விளைநிலங்களில் விளைந்தவற்றை தந்து அனைவரும் சேர்ந்து விழாவுக்கு வேலை செய்தனர். பாண்டிய அரசவை சார்பாக மக்களுக்கு பொன்னும் பொருளும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் குபேரனின் அழகாபுரி கூட தடாதகையின் மதுராபுரிக்கு ஈடாகாது! அப்படி ஒரு பொன்னான காலம், இப்பிரபஞ்ச வரலாற்றில் அத்தகைய நிகழ்வு நடைபெறுவது அன்று தான்.


"வறுமை" என்ற சொல்லைக்கூட கண்டறிய முடியாத காலத்தை ஆட்சி செய்தவளின் திருமண விழாவை நடத்த செல்வங்கள் அனைத்தும் வாரி நிறைந்தது. அந்த நாளும் வந்தது..  ஒரே ஊரில் ஒரே இடத்தில் சாதாரண மனிதர்களும், சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும்,தேவர்களும், தெய்வங்களும் கூடினர். அன்று வரை உலகம் கண்டிராத படி அனைத்து தேவர்களையும் தெய்வங்களையும் அனைவரும் கண்டனர். எத்தனையோ தவம் செய்தாலும் யாருக்கும் கிடைக்காத அந்த வரம் அந்நாளில் மதுரை வந்த மக்களுக்கு கிட்டியது. 


மணப்பெண்ணான தடாதகையை கலைமகளான சரஸ்வதியும், திருமகளான மகா லட்சுமியும் அலங்கரித்தனர். 

பட்டொளி மிண்ண சர்வ ஆபரணங்களும் ஜொலிக்க மணமகளாய்  தயாரானாள் தடாதகை. இவ்வாறிருக்க மணமகனான சிவபெருமான் இன்னும் வராதிருந்தார். எங்கே எப்படி வருவார்? யாருக்கும் தெரியவில்லை. அந்த நிகழ்வை நோக்கி அனைவரும் காத்திருந்தனர். 


திருமணத்துக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்க மணமகளாய் பாண்டிய பேரரசி தயாராகி கொண்டிருக்க மணமகனான சிவபெருமானின் வரவு ஒன்றே பாக்கி.. மணமகளாம் அரசி தடாதகையை காண ஒரு பெருங்கூட்டமும் பாண்டிய நாட்டு மக்களும் திரண்டிருந்தனர். இன்னொருபுறம் முனிவர்களும் ரிஷிகளும் சிவபெருமானை தரிசிக்க காத்திருந்தனர். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தாலும் காண கிடைக்காத எம்பெருமானின் தரிசனம் பெறும் பேரன்றோ!


தன் திருமணத்துக்கு ஈசன் எப்படி வரப்போகிறார். புலித்தோலுடுத்தி பாம்பை அணியாக கொண்டவராக வருவாரா அல்லது வேறு விதமாக வருவாரா? திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளை காண அனைவரும் ஆவல் பூண்டனர். மணமகள் இல்லம் சார்பாகவும் பாண்டிய பேரரசின் சார்பாகவும் தடாதகையின் தாயாரான காஞ்சனமாலை மதுரை நகரின் எல்லையில் மணமகன் வரவை நோக்கி காத்திருந்தார். 


சிவபெருமான் எப்படி வருகை தந்தார்? எப்படி இருந்தார்? அதுவரை தேவர்களும் முனிவர்களும் ஏன் சிவகணங்களே காணாத ஈசனின் திருத்தோற்றம் அன்று வெளிப்பட்டது. அனைவருக்கும் திகைத்து நின்றனர்.. சிவபெருமானை அவர்கள் எத்தகைய வடிவில் கண்டனர்? 


அடுத்த தொடரில் நாமும் காண்போம்..


மீனாக்ஷீம்!!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்